Skip to main content

Posts

Showing posts from November, 2015

கம்பீரமாக நிற்கிறது கல்லணை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு - 7  இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் போராடியே கடந்தார்கள். அந்த போராட்டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.  ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாதுகாத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வரை தேங்க

சென்னையின் சேதத்துக்கு காரணம் என்ன?

 ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு - 6 கார்கள் சென்ற சாலையில் படகுகள் சவாரி  ஏரிகளிலும், நீர்நிலைகளிலும் வீடுகள் முளைத்ததின் விபரீத விளைவு அடையாறு - வெள்ளப் பெருக்கு   எங்கெங்கு காணிலும் தண்ணீரடா சென்னையின் வெள்ளம் வழிந்த பாடில்லை. மழை விட்டு விட்டுத் தொடர்கிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி யிருப்பதாக எச்சரிக்கிறது வானிலை மையம். ஏரிக்கரை மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கூனிக்குறுகி ஓடிய கூவமும் அடையாறு ஆறும் சீறிப் பாய்வதை மக்கள் மிரட்சியோடு பார்க்கின்றனர். உயிர்ப்பலி உயர்ந்து கொண்டே செல்கிறது.  ஆனால், சென்னைக்கு புயல் புதிது அல்ல. காலம்காலமாக கடும் புயல்களை தாங்கியது அது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு தாக்குதலின்போதும் சென்னை தன் னைத் தானாக தகவமைத்துக் கொண்டது. முதல் உலகப் போர் காலகட்டம்வரை இது நீடித்தது. அதன் பிந்தைய நகர மயமாக்கல்தான் சென்னையின் இயல் பான நீரோட்டத்தை சிதைக்கத் தொடங்கியது.  சென்னையின் அடிப்படை அமைப்பைப் பார்ப்போம். இங்கு ஆண்டு சராசரி மழையளவு 1,100 மில்லி மீட்டர். (தென்மேற்கு பருவம

உங்கள் நிதி நிலையை பாதுகாக்கும் 5 ‘உ’க்கள்!

அ ன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கும், நமது முன்னேற்றத்துக்காக வைத்திருக்கும் உடைமைகளுக்கும் காப்பீடு எடுத்து வைப்பது அவசியம்!   தமிழில் ‘உ’ என்ற எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதாவது எந்த ஒன்றையும் எழுத ஆரம்பிக்கும் போது ‘உ’ என்கிற பிள்ளையார் சுழி போட்டு தான் நம்மில் பலர் ஆரம்பிக்கிறோம். நமது வாழ்க்கையில் ஐந்து ‘உ’க்கள் மிக முக்கியமானவை. முதல் உ – உயிர் பாதுகாப்பு இரண்டாம் உ -  உடல் நல பாதுகாப்பு. மூன்றாம் உ  – உடைமை பாதுகாப்பு. நான்காம் உ – உணர்வுப்பூர்வமான நிதித் திட்டமிடல் ஐந்தாம் உ – உயில் இந்த ஐந்து ‘உ’க்களில் ஏதேனும் ஒன்றை நம் வாழ்க்கையில் செய்யத் தவறினாலும், அதுவே வாழ்க்கை முன்னேற்றத்தில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி, அதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த ஐந்து உ-க்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதல் ‘உ’ உயிர் பாதுகாப்பு!   மனித  வாழ்க்கையின் முழு அங்கம் உயிர். அது இல்லை  எனில் எதுவும் இல்லை. மனித உயிருக்கு பாதுகாப்பு நம் நாட்டில் மிக மிகக் குறைவு. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் ஆரம்பித்து சுமார் 60 வருடங்கள்

உங்களுக்கு டயபடிஸா…? – சுஜாதாவின் அட்டகாசமான பதில்கள்/விளக்கங்கள் !!!

தலைவர் மறைந்திருக்கலாம். அவர் எழுத்துக்கள் என்றும் சிரஞ்சீவியானவை தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் விதத்தில் நான் எழுத விரும்புவது டயபடிஸ் பற்றி…( ஜூனியர் விகடன் 2003 ) ?உலகத்தில் டயபடிஸ்காரர்கள் எத்தனை பேர் ? !பதினேழரை கோடி. இன்னும் ஐந்து வருஷத்தில் இருபத்துநாலு கோடியாகப் போகிறது! இந்தியாவில்? போன வியாழக்கிழமை கணக்கிட்டபடி, நாலு கோடி இந்தியர்கள் டயபடிஸ்காரர்கள். அது 2010க்குள் பதினொன்றரைக் கோடியாகப் போகிறதாம்! உலகின் டயபடிஸ் தலைநகரம் இந்தியாதான் என்கிற சந்தேகத்துக்குரிய பெருமை நமக்கு உண்டு. ?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ? !சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், க

உணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 5 சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது!  நிரம்பி வழியும் மூக்கனேரி, சேலம்   இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை.  சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலா

படகு சவாரி முன்னே... பாசனம் பின்னே! !!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 4 பழந்தமிழர் ஏரிகளைப் பராமரிக்க தனி வாரியம் அமைத்தனர். குடவோலை முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கரை பராமரிப்பு, கலுங்கு பராமரிப்பு, காவல், நீர் பங்கீடு இவையெல்லாம் ஏரி வாரியத்தின் பணி. ஏரி வாரியத்தினர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஏரிகளில் மேடிட்ட மண்ணை தூர் வாரினர். இது ‘குழி குத்துதல்’ என்று அழைக்கப்பட்டது. ஏரி வாரியம் மட்டுமின்றி பாசனத்தைப் பராமரிக்க கழனி வாரியம், வயல் வழிகளைப் பராமரிக்க தடிவழி வாரியம், வரி வசூலைப் பராமரிக்க பஞ்ச வாரியம் என்றெல்லாம் குழுக்கள் அமைக்கப்பட்டன.    ஏரிகளைப் பராமரிப்பதற்கான செலவுகள், தானம் மற்றும் மானியமாக வழங்கப்பட்ட நிலங்களின் பாசன வருவாயில் இருந்து பெறப்பட்டது. இந்த நிலங்கள் ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’, ‘ஏரிப்பட்டி’ என்று அழைக்கப்பட்டன. ஏரியில் மீன் பிடிப்போர் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ஏரி பராமரிப்புக்காக அளிக்க வேண்டும். இது ‘பாசிப் பட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மீன் பிடிப்போர், சலவைத் தொழில் செய்வோர் பகலில் ஏரியை காவல் காத்தனர். இரவு காவலுக்கு தனி ஆட்கள்

மடையர்களை போற்றுவோம்!!!!!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 3 இன்றைய நிலையில் ராஜசிம்ம மங்கலம் ஏரி (???) நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை).  ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள

கடலூர் அழிவுக்கு காரணம் யார்?

குறிஞ்சிப்பாடிக்கு அடுத்துள்ள பூதம்பாடி கிராமத்தில் சூழ்ந்துள்ள வெள்ளம். வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான். குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது.  அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த விழிப் புணர்வு யாருக்கும் இல்லை.  கடந்த 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ போர்கள், வன்முறைகள், கொடூரங்கள் நடந்திருக் கின்றன. வாதாபி எரிந்தது. மதுரை எரிந்தது. உறையூர் எரிந்தது. சமணர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் தேவாலயங்களை போர்ச்சுக்கீசியர் அழித்தனர். போர்ச்சுக்கீ சியர்களின் தேவாலயங்களை ஆங்கி லேயர்கள் அழித்

அன்றைய தஞ்சையும் இன்றைய சென்னையும்!!!!!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 2 இன்று தண்ணீர் பங்கீட்டுக்காக அண்டை மாநிலங்களிடம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வழி தெரியாமல் தவிக்கிறோம். உச்ச நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்க வில்லை. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தீராத நிலையிலும் கர்நாடகம், மேகதாட்டுவில் அணையைக் கட்டத் துடிக்கிறது. காவிரி ஆற்றின் நீரியியல் ஓட்டம் முக்கியத் துவம் வாய்ந்த மேகாதாட்டுவில் மட்டும் அணை கட்டப்பட்டுவிட்டால், காவிரியை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.  ஆனால், நமது முன்னோர்கள் துளி பாரபட்சம்கூட இல்லாமல் நீரைப் பங்கீடு செய்தார்கள். இன்றைக்கு காவிரி ஆற்றில் தமிழகத் துக்கு மேல் பகுதியில் அணையைக் கட்ட முயற்சிக்கிறது கர்நாடகம். ஆனால், அன்றைக்கு ‘ஆற்றில் இருந்து நீர் எடுத்துவரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் இன்னொரு வாய்க்கால் வெட்டக்கூடாது; ஒரு ஏரிக்கு நீர் வரத்து கிடைக்கும் மேற்பகுதியில் இன்னொரு ஏரி வெட்டக்கூடாது’ என்பது பழந்தமிழர் வகுத்த கடுமையான சட்டம். இதனை ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று கி.மு. 1117- ஆண்டு ஸ்ரீவல்லப பாண்டியனின் குருவித்துறை பெருமாள்

ஒரு நதியின் படுகொலை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு  மணிமுத்தாறு அல்ல தாமிரபரணி சமீபத்தில் சேலத்துக்கு சென்றபோது சாக்கடை பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாக சாக்கடையில் விட்டிருந்தார்கள். தூரத்தில் நின்றபோதே துர்நாற்றம் தூக்கியது. சாக்கடையின் கரை ஓரத்தில் வீற்றி ருக்கிறது சேலம் பெரிய மாரியம்மன் கோயில். நினைவுகள் பின்னோக்கிச் சுழல்கின்றன.  புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம். இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேலத்தின் வரலாற்றுப் பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சூழ்ந்தப் பகுதி என்று அர்த்தம். வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலைப் பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சி அழைக்கிறது கொல்லி மலை. இவை எல்லாம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள். சேலத்தின் நீராத