Skip to main content

உணர்வால் இணைந்த மக்கள்... உயிர் பெற்ற ஏரிகள்!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு- 5

சேர்வராயன் மலையில் தொலை நோக்கி பார்வை மையத்துக்கு மேலே மலை உச்சியில் இருக் கிறது ஒரு முகடு. அங்கிருந்து பார்த்தால் சேலம் மாவட்டம் முழுவதையும் கழுகுப் பார்வையில் காணலாம். 20 ஆண்டு களுக்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கீழே சுமார் 60 ஏரிகள் சூரிய வெளிச்சம் பட்டு நீல வண்ணத்தில் ஜொலிக்கும். பூமித் தாய்க்கு நீலக்கல் அணிவித்தது போன்று கண்கொள்ளாக் காட்சி அது! 

நிரம்பி வழியும் மூக்கனேரி, சேலம்

 இப்போது அங்கு சென்று பார்த்த போது அந்த நீலக்கற்கள் பெருமளவு களவு போயிருந்தன. 10 ஏரிகளைக்கூட பார்க்க முடியவில்லை. 

சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் மன்னார் பாளையம், கருப்பூர், வாழப்பாடி ஆகிய மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடர் ஏரிகளை நிரப்பிச் சென்றது. மன்னார்பாளையம் வழியாக வழிந்த தண்ணீர் திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, சக்கிலி (பேராந்தி) ஏரி, அச்சுவான் ஏரி, பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, சீலாவரி ஏரி, நகரமலை இஸ்மான்கான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகிய ஏரிகளை நிறைத்தது. வாழப்பாடி வழியாக வழிந்தோடிய தண்ணீர் வலசையூர் தொட்டில் ஏரி, அணைவாரி முட்டல் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, நெய்க்காரன்ப்பட்டி ஏரி, செந்தாரப்பட்டி ஏரிகளை நிறைத்தது. கருப்பூர் வழியாக வழிந்தோடிய தண்ணீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது. 

ஆனால், இன்று பல ஏரிகளைக் காணவில்லை. அச்சுவான் ஏரி புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி விளையாட்டு மைதானமாகிவிட்டது. தாதுபாய் குட்டை, கொல்லங்குட்டை, பஞ்சந்தாங்கி, பச்சைப்பட்டி, சீலாவரி இவை எல்லாம் மண்ணுக்குள் மூச்சடக்கி வெகு காலமாகிவிட்டன. பூலாவரி ஏரிக்கு நீர் செல்ல சோழர் காலத்தில் கட்டப்பட்ட ராஜசேகரன் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சாக்கடை ஓடுகிறது. 17-ம் நூற்றாண்டில் இருங்கூர் பட்டையக்காரன் திருமலை அல்லாள இளைய நாயக்கனால் கட்டப்பட்ட 32 மைல் நீளமுள்ள ராஜா வாய்க்கால் எங்கே என்று தெரியவில்லை. 

இவ்வளவு அழிவுகள் நடந்த அதே சேலத்தில்தான் தமிழகத்திலேயே முதல்முறையாக ஏரிகளுக்கு மீண்டும் ஒரு பொற்காலம் பிறந்துள்ளது. கடந்த கால தவறுகளுக்குப் பரிகாரம் தேடி யதைப் போல தூர்ந்துப்போய், குப்பைமேடுகளாவும் சாக்கடையாகவும் இருந்த ஏரி, குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து புனரமைத்துள்ளனர். மக்களை ஒருங்கிணைத்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியது ‘சேலம் மக்கள் குழு’. 

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு கன்னங்குறிச்சி - மூக்கனேரி கருவேல முட்செடிகள் மண்டி பெருமளவில் ஆக்கி ரமிப்பில் இருந்தது. அதன் கரைகள் மலம் கழிக்கப் பயன்பட்டன. ஏரியில் பல இடங்கள் தூர்ந்து குப்பைகள் கொட் டப்பட்டன. துர்நாற்றம், சமூக விரோதச் செயல்கள் காரணமாக அந்தப் பக்கம் செல்லவே மக்கள் அஞ்சினார்கள். 

2009-ம் ஆண்டு அரசு அனுமதியுடன் அந்த ஏரியைத் தத்தெடுத்தது ‘சேலம் மக்கள் குழு’. ஏரியை மீட்பது குறித்து சேலம் நகரம் முழுக்க பிரச் சாரம் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களி டம் இந்தப் பிரச்சினை முன் வைக்கப் பட்டது. சில நாட்களிலேயே உணர்வால் ஒன்றுபட்டார்கள் மக்கள். பிரச்சாரம் எழுச்சியுற்றது. 

முதலில் உள்ளூர் வாசிகள் அங்கே அசுத்தம் செய்வதைத் தவிர்த்தனர். பணிகள் தொடங்கின. ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண் கள், பெண்கள் என மக்கள் 500 பேர் வரை கூடினார்கள். சில்லறை காசுகள் தொடங்கி ரொக்கம் வரை கையில் இருந்த காசை போட்டார்கள். தினக் கூலிக்கு செல்பவர்கள் பலர் வேலையை விட்டுவிட்டு வந்து கரைகளை சீரமைத் தார்கள். ஏரியில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் நூற்றுக்கணக் கான லாரிகளில் அப்புறத்தப்படுத்தப் பட்டன. கருவேல முட்செடிகள் வேராடு பிடுங்கப்பட்டன. தூர்ந்திருந்தப் பகுதிகள் எல்லாம் தூர் வாரப்பட்டன. 

தூர் வாரியதில் மலை போல குவிந்தது வண்டல் மண். அதனை வீணாக்காமல் ஏரியின் நடுவே கொட்டி சிறு தீவு அமைத்தார்கள். 10 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்தத் தீவு சூழலியல்ரீதியாக தண்ணீரை சேமிக்கும் தன்மைக் கொண்டதாக அமைந்தது. 30 வாரங்களில் இந்தப் பணிகள் நடந்து முடிந்தன. ரூ.53 லட்சம் செலவானது. தொடர்ந்து 2010-ம் ஆண்டிலேயே ஏரி முழுமையாக நிரம்பியது. நடுவே இருந்த தீவில் மரங்கள் அடர்ந்து பறவைகள் சரணாலயமாக மாறியது. மக்கள் செல்லவே அஞ்சிய அந்தப் பகுதிக்கு இன்று குடும்பத்துடன் சென்று ரசிக்கிறார்கள். 

இதைவிட மோசமாக கிடந்தது அம்மாப்பேட்டை - குமரகிரி ஏரி. 29 ஏக்கர் பரப்பளவு கொண்டது அது. அம்மாப் பேட்டையின் சாக்கடை அனைத்தும் ஏரிக்குள் விடப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சியே ஏரிக்குள் குப்பைகளைக் கொட்டியது. 2013-ம் ஆண்டு இதனை கையில் எடுத்தது சேலம் மக்கள் குழு. மூக்கனேரியில் செய்ததுபோலவே வேலை செய்தார்கள். 40 வார விடுமுறை நாட்களில் பணிகள் நடந்தன. இன்று அந்த ஏரியும் நடுவில் பசுமைத் தீவுகளுடன் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

சேலம் நகரில் அரிசிப்பாளையத்தில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் தெப்பக் குளம் ஒன்று இருக்கிறது. 1640-களில் ராபர்ட் நோப்ளி என்பவரால் கட்டப்பட்ட இது, 1860-களில் சேலம் ஆட்சியராக இருந்த லாங்லி என்பவரால் புனர மைக்கப்பட்டது. மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இந்தக் குளம், 1980-களின் தொடக்கத்தில் அழியத் தொடங்கியது. 

குளம் குப்பைகளால் மேடிட்டு அந்தப் பகுதி எங்கும் சுகாதார சீர்கேட்டை பரப்பியது. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் அந்தக் குளத்தைக் கையிலெடுத்தது சேலம் மக்கள் குழு. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நீர் நிரம்பியிருக்கிறது தெப்பக்குளம். அடுத்ததாக கடும் சீரழிவில் இருக்கும் பள்ளப்பட்டி ஏரியைத் தத்தெடுக்க இருக்கிறது சேலம் மக்கள் குழு.
அரசை மட்டுமே நம்பியிருக்காமல் மக்கள் மனது வைத்தால் நமது நீர் நிலைகளை மீட்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது சேலம். 

-- நன்றி: டி.எல்.சஞ்சீவிகுமார் - தமிழ் இந்து

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...