Skip to main content

'கிராவிட்டி' (Gravity) -ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

Cast Away, 127 hours, Life of Pi போல, சர்வைவல் (உயிர்வாழ வேண்டும் என்ற உந்துதல்) என்பதை அடிப்படையாகக் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கின்றன (தமிழில் மரியானைத் தவிர எதுவும் தோன்றவில்லை). ஒரு சாதாரண மனிதன், விதி வசத்தால் தனியாளாக எங்கேயாவது மாட்டிக்கொண்டு, அங்கிருந்து வீடு திரும்பப் படும் பாடுகளே, இவ்வகைக் கதைகளின் அடிப்படை. இந்த வகையான படங்கள், பத்தில் ஒன்பது, கண்டிப்பாக பாக்ஸ் ஆஃபிஸில் உயிர் பிழைத்துவிடும் என்பது வரலாறு. அப்படி சமீபத்தில் வந்து ஹிட்டடித்திருக்கும் படம்தான் 'கிராவிட்டி'.


- - தேதி சங்கதி தெரியாதவர்களுக்கு:
10.4.13 என்பது அக்டோபர் மாதம் 4ம்  தேதியைக் குறிக்கும். அமெரிக்காவில், முதலில் மாதம், பின்னர் தேதி என்ற நடைமுறை இருக்கிறது.)
ஒரு விண்கலத்தைப் பழுதுபார்க்கும் போது ஏற்படும் விபத்தால், அந்த விண்வெளி வீரர்களின் குழுவில் அனைவரும் இறந்து போக, புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock-SPEED பட நாயகி) மட்டும் உயிர் பிழைக்கிறார். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சங்கதிகளும் சேதமாகியிருக்க, பக்கத்தில் (100கி.மீ தொலைவில் !) மிதந்து கொண்டிருக்கும் சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தை எப்படியாவது அடைந்தால், உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில், பல்வேறு, அக + புறத் தடைகளைத் தாண்டி, சாண்ட்ரா எப்படி பூமிக்கு வருகிறார் என்பதே கதை.

படத்தில், ஹாலிவுட் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கிளேஷக்களில் இருந்து, பலவகையில் நிவாரணங்கள் உள்ளன. படம் 3198ஆம் வருடம் நடக்கவில்லை. வேற்றுகிரக வாசிகளின் அட்டூழியம் இல்லை, யார் வயிற்றையும் கிழித்துக் கொண்டு, விசித்திரமான ஜந்துக்கள் வரவில்லை, வித்தியாசமான ஆயுதங்கள் இல்லை, எல்லாம் வெடித்துச் சிதறும் நேரத்தில், நாயகன் நாயகியின் பாழாய்போன (உதட்டோடு உதடு) முத்த்த்தக்காட்சி இல்லை... இப்படிப் பல.

படத்தின் பிரதானப் பாத்திரம், சாண்ட்ரா புல்லக் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் ஆகாய மார்க்கத்தில் சீக்கிரம் பரமபதம் அடைகிறார்கள். படத்தினை ஒற்றை மனுஷியாக, தோளில் சுமக்கிறார். புதிதாக பயிற்சி முடித்து, விண்ணிற்கு வந்திருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதிலிருந்து, மெல்ல மெல்ல, தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் சூழல் வரை, மகிழ்ச்சி, பயம், தவிப்பு, இயலாமை எனப் பல்வேறு விதமான உணர்ச்சிகளை, அவ்வளவு பெரிய விண்வெளி உடைக்குள்ளிலிருந்து அள்ளித் தெளிக்கிறார். பல சமயங்களில், அவர் கண்ணும், உடல் மொழியும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. சான்ட்ராவிற்கு அடுத்து, ஜார்ஜ் க்ளூனி (George Clooney), 20 நிமிடம் சிறப்பாக கௌரவித்துவிட்டுச் செல்கிறார்.

இவர்களைத் தாண்டி, நம்மை படத்தோடு ஒன்றச் செய்வது, அதி துல்லியமான கிராபிக்ஸ், அதன் காட்சியமைப்பு, இசை மற்றும் ஒலி. படத்தின் ஒவ்வொரு நொடியிலும் கிராபிக்ஸ் வியாபித்திருக்கிறது. வான்வெளி, அங்கிருந்து தெரியும் பூமி, நட்சத்திரக் கூட்டம், உடையும் விண்கலம், சுழற்சியில் இருக்கும் உடைந்த பாகங்கள், விண்கலத்தின் உள் மிதக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் என, கிராஃபிக்ஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். 3டி, அதை இன்னும் மெருகேற்றியிருக்கிறது. வீரர்கள் மிதக்கும் போது, அவர்களுடனே மிதப்பது போல, சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் பாகங்கள், நம்மைச் சுற்றி இருப்பதைப் போல உணர முடிகிறது. 'அவதார்' படத்திற்குப் பிறகு, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது 'கிராவிட்டி'.

படத்தை இயக்கி, திரைக்கதையிலும், படத்தொகுப்பிலும், தயாரிப்பிலும் பங்கெடுத்திருப்பவர், மெக்ஸிக திரைப்பட இயக்குனர், அல்ஃபோன்சோ கௌரன் (Alfonso Cuarón). ஏற்கனவே சில்ட்ரன் ஆஃப் மென், ஹாரிபாட்டரின் மூன்றாவது பாகம் என ஒரு சிலப் படங்களை இயக்கி, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டவர். அவரது இந்த முயற்சி, கண்டிப்பாக ஹாலிவுட்டில் ஒரு மைல்கல்.

வெறும் கிராஃபிக்ஸ் பூச்சை மட்டுமே நம்பாமல், ஒரு சாதாரணள், அசாதாரணமான தருணங்களை எப்படியெல்லாம் எதிர் கொள்கிறாள் என, தனி மனித உளவியிலை மையமாக வைத்தே கதையை நகர்த்தியிருக்கிறார். சாண்ட்ரா, தற்கொலை செய்து கொள்ளத் தயாராகும் காட்சி, ரேடியோவின் கிராஸ் டாக்கில் கேட்கும் பேச்சு, அதற்கு சாண்ட்ராவின் பதில் சிறந்த உதாரணங்கள். படத்தின் பல இடங்களில், மிஷ்கினைப் போல, நீளமான, வசனங்கள் குறைந்த / இல்லாத காட்சிகள், மேலும் அழுத்தத்தையும், பரபரப்பையும் கூட்டுகின்றன.

படத்தில் காண்பிக்கும் விண்வெளி சமாச்சாரங்கள் பெரிய ரீல், படத்தில், பல்வேறு இடங்களில், பல வகையான நுண் குறியீடுகள் உள்ளன என, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அசை போடத் தேவையான விஷயங்களை, இப்போதே இணையத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நல்ல ஒலி-ஒளி-3டி அமைப்புள்ள திரையரங்கில் 'கிராவிட்டி'யைப் பாருங்கள். உங்கள் வாழ்வில், 90 நிமிடங்கள் நீங்களும் விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.

--நன்றி: தமிழ் தி இந்து 

என்னுடைய சில எண்ணங்கள்

இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கதையை சுட்டுவிட்டார்கள் என்று புலம்பியதை எங்கேயோ படித்த ஞாபகம். இத்தனை நாள் தமிழ் படங்களைப் பற்றி மட்டும் இவ்வாறு கூறி வந்தவர்கள், இன்று தேர்ச்சி பெற்று ஒரு படி மேலே சென்று ஹாலிவுட் படத்தைப் பற்றியும் புகார் சொல்ல ஆரம்பித்திருப்பது நல்ல (!!!) முன்னேற்றம்.

எனக்கு சான்ட்ரா புல்லக்கை சுத்தமாகப் பிடிக்காது. இவர் ஒன்றும் பெரிய நடிகை இல்லாவிட்டாலும் ஓவராக அலட்டுவார். ஆனால், இந்தப் படத்தில் மிக நன்றாகவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கென்னவோ, இந்தப் படத்தைப் பார்த்த போது அமரர் சுஜாதா எழுதிய "வானத்தில் ஒரு மௌனத்தாரகை" என்ற அருமையான கதை நிறையவே ஞாபகத்துக்கு வந்தது. அந்தக் கதை சுஜாதா '80 களில் எழுதியது. அதில் ஒரு விண்வெளி வீரர் பழுதாகிவிட்ட விண்கலத்தை சரி செய்ய விண்வெளிக்கு அனுப்பபடுவார். அவர் செல்லும் விண்கலமும் பழுதாகிவிடும் நிலையில், அரசு மேற்கொண்டு பெரும் செலவு செய்து அவரைக் காப்பாற்ற வேண்டாம் என விட்டுவிடுவார்கள். அவருடைய குடும்பம் அவர் வந்துவிடுவார் என்ற எண்ணத்திலேயே இருக்க, விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் அவரும் தன்னைக் காப்பாற்ற உதவி வந்துவிடும் என்ற நினைப்பிலேயே இருக்க கதையை முடித்துவிடுவார் சுஜாதா. ஹ்ம்ம்ம்ம்ம்....கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சொன்னது போல சுஜாதவை தமிழ் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...