Skip to main content

மாற்றம் மட்டுமே நிரந்தரம்

'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்ற குறளை நம்மில் பலர் கேட்டிருப்போம். தாமரைக்கு தனியாக எந்த உயரமும் இல்லை. தண்ணீரின் உயரம்தான் தாமரையின் உயரம். அதாவது தண்ணீரின் அளவுக்கு ஏற்ப தாமரை தன்னை மாற்றிக்கொள்ளும். மாற முடியாவிட்டால் அழிந்துவிடும் என்பதுதான் உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிஸினஸ்களுக்கும் பொருந்தும்.

சில பிஸினஸ்கள் தாமரையைப் போல தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு நீண்ட காலம் வாழுகிறது. சில பிராண்ட்கள் வெற்றி இறுமாப்பில் தான் மாறத்தேவையில்லை என்று எண்ணி சவால் வெள்ளத்தில் மூழ்கி மறைந்துவிடுகிறது.

கைக்கடிக்காரத்தை குவார்ட்ஸ் நிறுவனம்தான், முதலில் தயாரித்திருந்தபோதும், சாவி கொடுக்கும் கைக்கடிக்காரத்தையே விற்பேன் என அடம்பிடித்து தோற்றதைப்பற்றி நமக்குத் தெரியும். தான் உலகுக்கு அறிமுகப்படுத்திய டிஜிட்டல் கேமராவை அதிகம் விற்கத் தொடங்கினால், தன் ஃபிலிம் ரோல் விற்பனை பாதிக்கும் என்று எண்ணி பழைய கேமராவையே விற்று, கடைசியில் மொத்தமாக மறைந்த பிராண்டைப் பற்றியும் நமக்குத் தெரியும். இவ்வாறு தோல்வியடைந்த பிராண்டுகளைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வது நம்மை சோர்வடையச் செய்யும்.

மாறாக, 'மாற்றம் என்பது நிரந்தரம்' என்பதைப் புரிந்து கொண்டு உயர்வடைந்த பிராண்டுகளைப் பற்றி அலசி ஆராய்வது நமக்கு புத்துணர்வைத் தரும். பிராண்டுகளுக்கு சோதனைகள் பல ரூபத்தில் வருவதுண்டு. இவற்றில் கடுமையான தாக்கத்தை எற்படுத்த வல்லது இரண்டு. அவை போட்டி நிறுவனங்களின் புதிய படைப்புகளும் மற்றும் மாறிக் கொண்டே இருக்கும் மக்களின் தேவைகளும். இவற்றை எப்படி பிராண்டுகள் சமாளிக்கின்றன?

1953-ல் 3-எம் என்ற அமெரிக்க தொழில் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கிய பிராண்ட், 'இமேஷன்'. இது கணிப்பொறி தகவல் பதிவுக்காக உலகில் முதன்முதலில் காந்த டேப்பை தயாரித்தது. இதைத் தொடர்ந்து டேப் கேட்ரிஜ் மற்றும் ஃபிளாப்பி டிஸ்க் போன்ற கருவிகளையும் தயாரித்தது.

ஆனால், மக்களின் தகவல் தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்த ஒவ்வொரு கருவியும் உபயோகமின்றி போனது. பின்னர் 3-எம்மிலிருந்து பிரிந்து வந்து தனி நிறுவன பிராண்டான 'இமேஷன்'(imation), மக்கள் தேவையின் மாற்றத்திற்கேற்ப தன் ரூபத்தை ஃபிளாப்பி டிஸ்க்கி லிருந்து, காம்பாக்ட் டிஸ்க், பின்னர் ஃப்ளாஷ் டிரைவ் என மாற்றிக் கொண்டே வந்தது.

தற்போது 100க்கு மேற்பட்ட நாடுகளில் பல்வேறு வகையான பெரிய தொழில் நிறுவனம், சிறு வணிகம், அரசாங்கம், தனிநபர் போன்ற வாடிக்கையாளர்களை சம்பாதித்து, சுமார் 1,000 மில்லியன் அமெரிக்க டாலர், ஆண்டு வருமானத்தை 'இமேஷன்' எட்டியுள்ளது.

தன் பெயரை, கிளைப் பெயர்களான ஐயன்கீ(ironkey), மெம்மோரெக்ஸ் (memorex), நெக்ஸன் (nexsan), டிடீகே, (tdk) எக்ஸ்டீரீமெமக் (xtrememac) போன்றவற்றோடு இணைத்து பல்வேறு தகவல் பதிவு கருவிகளை இவ் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. கருவியின் தன்மையைப் பொறுத்து, இமேஷனுக்கு மேக்ஸல், ஜேவிசி, சோனி, வெர்பேட்டிம், ஃப்யூஜி, ஹெச்பி, கிங்ஸ்டன், ஸேண்டிஸ்க் என ஏகப்பட்ட போட்டியாளர்கள். இருப்பினும், உலகச் சந்தையின் மூன்றில் ஒரு பாகத்தை இமேஷன் கைப்பற்றியுள்ளது.

மக்களின் தேவைகளை சரியாக அறிந்து, உரிய நேரத்தில் இமேஷன் மாறாமல் போயிருந்தால், இப்போது அது அருங்காட்சியகத்தில் வைக்கத் தகுந்த 1.44 எம்.பி ஃபிளாப்பி டிஸ்க்கா கவோ அல்லது 120 எம்.பி பதிவு காம்பாக்ட் டிஸ்க்காகவோ மட்டும் இருந்து மறைந்து போயிருக்கும்.

இது போன்ற மாறத் தெரிந்த பிராண்டுகளின் உதார ணத்தை அறிய நாம் கடல் தாண்டிப் போகத் தேவையில்லை.1942-ல் இந்தியாவில் ஏசியன் பெயிண்ட்ஸ் உதயமானது. அந்த காலத்தில் இறக்குமதி செய்து விற்கப்பட்ட மற்றும் உள்நாட்டில் சிறுதொழிற்சாலைகளில் தயார் செய்து விற்கப்பட்ட பல பிராண்டுகள், ஏசியன் பெயிண்ட்ஸுக்கு கடும் போட்டியாக விளங்கியது.

இப்பிராண்டுகள் அனைத்தும் பெயிண்ட் டீலர்களைக் கவர்வதிலேயே தன் கவனத்தை செலுத்தியது. ஏசியன் பெயிண்ட்ஸ் தரமான பெயிண்ட் பொருட்களைத் தயாரித்து, விளம்பரங்களின் மூலம், மக்களை நேரடியாக சென்றடைந்தது. மக்கள் விரும்பிக் கேட்கும் பிராண்டாக மாறி, ஏசியன் பெயிண்ட்ஸ் தனது ஒயாத முயற்சியால் 1967-ல் சந்தையில் முதல் இடத்தை பிடித்தது. சுமார் 45 வருடங்களுக்கு மேலாக வீட்டுக்கு வாங்கும் பெயிண்ட் பொருட்களில் முதல் நிலையிலேயே இருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் தன் மொத்தக் குழுவின் வருமானமாக ரூ.11,000 கோடியை எட்டியுள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் தான் விற்கும் பொருட்களுக்கு தன் பெயரையும், மற்றும் ராயேல், டிராக்டர், ஏபெக்ஸ், ஏஸ், உட்சவ் பொன்ற கிளைப் பெயர்களையும், இணைத்து பிராண்டுகளாக்கி உள்ளது. இதைச் சாதிக்க ஏசியன் பெயிண்ட்ஸ் தன்னை எப்படி மாற்றிக் கொண்டது? தொடர்ச்சியாக மக்களின் விருப்பங்களுக்கேற்ப உரிய தரத்தில், சரியான விலையில் பொருட்களை வழங்கியது.

போட்டி நிறுவனங்கள் குறைந்த அளவாக 500 மில்லி லிட்டர் பெயிண்ட் டப்பாவையே வழங்கியபோது, ஏசியன் பெயிண்ட்ஸ், 50 மில்லி லிட்டர் பெயிண்ட் டப்பாவை வழங்கி மக்களை தனக்குப் பொருத்தமான வண்ணம் எது என சோதித்துப் பார்க்கத் தூண்டியது. மற்ற பிராண்டுகள் 40 வகை வண்ணங்களை வழங்கியபோது, இது முதன்முறையாக 151 வண்ணங்களை வழங்கி அசத்தியது.

தொடர்ந்து அது 1000 வண்ணங்களாக மாறியது. முதன்முதலில் 'கலர் வேல்டு' என்ற அமைப்பின் மூலம், சிறு மாதிரியாக கொண்டுவரும் எந்த ஒரு வண்ணத்திற்கும் ஏற்ப பெயிண்ட்டை, கலவை இயந்திரத்தின் மூலம் தயாரித்துக் கொடுத்தது.

பெயிண்ட் விற்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொள்ளாமால், 'ஹோம் சொல்யூஷன்ஸ்' என்ற அமைப்பின் மூலம் சுவருக்கு வர்ணம் பூசும், கைதேர்ந்த தொழி லாளர்கள் குழுவை அமைத்து தேவைப்படும் வாடி க்கையாளர்களின் இல்லங்களுக்கு அனுப்பியது.

அது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் இல்லங்களைப் புகைப்படம் எடுத்து, கணிப்பொறி மூலம், பல வண்ணங்களில் தங்கள் இல்லங்கள் எப்படி காட்சியளிக்கும் என்பதை ஊகிக்க உதவியது. முதன்முறையாக 'கிட்ஸ் வேல்டு' என்ற அமைப்பின் மூலம், சிறு குழந்தைகளின் விருப்பங்களுக்கேற்ப பெயிண்ட்டை தேர்வு செய்ய வழிவகை செய்தது.

சமீபத்தில் 'கலர் நெக்ஸ்ட்' என்ற திட்டத்தின் மூலம் கட்டிடத் தொழிலாளர்கள், பொறியாளர்கள், வீட்டு உட்புறத் தோற்ற அலங்கரிப்பு வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து எந்த வகை வண்ணத் தோற்றங்கள் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்குத் தேவைப்படும் என்பதை அறிந்து வருகிறது.

இப்படி ஒயாமல் தேவைக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் தனது போட்டி நிறுவனங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. பல போட்டி நிறுவனங்கள், ஏசியன் பெயிண்ட்ஸின் நடைமுறைகளைத் தழுவி செயல்படுத்திய போதிலும், அந்நிறுவனங்களினால் முதன்மை இடத்திற்கு வர முடியவில்லை. இன்னும் வீட்டுக்கு வாங்கும் பெயிண்ட் பொருட்களின் சந்தையில் 52 விழுக்காட்டைப் கைப்பற்றி முன்னிலையிலேயே உள்ளது. இருப்பினும் இன்னும் பல புதிய மாற்றங்களுக்கும் தயாராகவே உள்ளது. இது அபூர்வமானது!

ஏனெனில், ஒரு விஷயத்தில் தோல்வியடையும் போது மாறத்தயாராக இருக்கும் பிராண்டுகள் வெற்றியடையும்போது மாறத் தயாரில்லை. வெற்றியடையும்போது, தான் செய்வதுதான் சரி, இதுவே போதுமானது என்ற மமதை வந்து ஒட்டிக்கொண்டு மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது.

'மாற்றமே நிரந்தரம்' என்றுணர்ந்த பிராண்டுகளுக்கோ 'ஏமாற்றங்கள் தற்காலிகமானது' தான் சரியா?

----நன்றி: தமிழ் இந்து 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்