Skip to main content

அமெரிக்கா 'டெட்பீட்' (deadbeat) அரசாக மாறுமா?

அமெரிக்க அரசு பெற்று வரும் கடனின் அளவை உயர்த்துவதற்கு சட்டம் நிறைவேற்றப்பட வில்லை என்றால், அமெரிக்கா 'டெட்பீட்' (Deadbeat என்றால் கடனை திருப்பி செலுத்த முடியாதவன் என்று அர்த்தம்) நாடாகும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா செப்டம்பர் 19, அன்று மீச்சுரி மாவட்ட லிபர்டி நகரில் உள்ள வாகன தொழிற்சாலையில் பேசும்போது கூறினார். இப்போதைக்கு அமெரிக்காவின் பெரிய சிக்கலே பெருகி வரும் கடன் அளவுதான். இதனை மேலும் உயர்த்த ஒபாமா முற்படும் போது, எதிர்கட்சியான குடியரசுக் கட்சி (Republican Party) அம்முயற்சியைத் தடுக்கிறது.

2008-ல் ஏற்பட்ட நிதிச் சிக்கலுக்கு பிறகு அமெரிக்க அரசு பொருளாதாரத்தை உயர்த்த தன்னுடைய செலவுகளை அதிகரித்தது. 2010 முதல் 'ஒபாமாகேர்' என்ற கூடுதலான சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார காப்பீடு தொகை செலுத்த முடியாத ஏழைகளுக்கு அரசே பிரீமியம் செலுத்துவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

இத்திட்டம் அரசியல் ரீதியாக ஒபாமாவுக்கும் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சிக்கும் (Democratic Party) பயன் அளிக்கக்கூடியது என்பதாலும், அதே நேரத்தில் பொதுமக்களின் வரிப்பணம் விரயமாகிறது என்றும் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சி இத்திட்டத்தை எதிர்க்கிறது. மேலும், அரசு பொது கடன் அளவை உயர்த்திக் கொண்டே போவது நல்லதல்ல என்ற பொருளாதார நிலைப்பாட்டை குடியரசுக் கட்சி கொண்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு சபைகள் உள்ளதுபோல், அமெரிக்க காங்கிரசில் (அமெரிக்க பாராளுமன்றம்) பிரதிநிதிகள் சபை (House of Representatives) செனட் சபை (Senate House) என இரு சபைகள் உண்டு. இதில் பிரநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையுடனும், செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடனும் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் அக். 1, அமெரிக்க நிதியாண்டின் துவக்கம். இதற்கு முன்னர் அடுத்த நிதியாண்டில் எவ்வளவு பொது கடனை வாங்கலாம் என்று நிர்ணயித்து அதற்கான சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க அதிபருக்கு அனுப்பவேண்டும். அடுத்த ஆண்டிற்கு $17.8 டிரில்லியன் அளவுக்கு பொது கடன் உயர்த்தபட்டால் மட்டுமே அடுத்த வருட பட்ஜெட்டை உருவாக்கமுடியும் என்ற நிலையை ஒபாமா அரசு எடுத்துள்ளது.

கடந்த வாரம் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில், அமெரிக்க அரசு கடன் வாங்கும் அளவை உயர்த்துவதற்கு எதிராகவும், ஒபாமாகேர் சுகாதார திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தவும் ஒரு சட்டத்தை அந்த சபையில் நிறைவேற்றியது.
ஒபாமாகேர் திட்டத்திற்கான நிதியளிப்பை நிறுத்துவதை ஒபாமா ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இச்சட்டம் தன்னுடைய ஒப்புதலுக்கு வந்தால் தன்னிடம் உள்ள ரத்து அதிகாரத்தை (வீட்டோ- veto) பயன்படுத்தி இச்சட்டத்தை நிறுத்தபோவதாக ஒபாமா கூறினார். இல்லையெனில், அக்டோபர் 1ம் தேதி முதல் அமெரிக்கா 'டெட்பீட்' நாடாக மாறா வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்தார்.

அமெரிக்கா டெட்பீட் நாடாக மாறினால் என்ன நடக்கும்? அமெரிக்க அரசின் செயல்பாடுகள் சில கட்டாயமானவை. ஆனால், சில ராணுவ சேவைகளுக்கு, பொது பூங்காக்களுக்கு, இன்னும் பிற சேவைகளுக்கு பணம் இல்லாமல், அரசு இயந்திரம் முடங்கும்.

வரும் அக்டோபரில் அமெரிக்கா 'டெட்பீட்' அரசாக மாறுமா? இதற்கான சாத்தியங்கள் குறைவுதான். ஏனெனில், தற்போது பிரதிநிதிகள் சபையினால் உருவாக்கப்பட்ட சட்டம், அடுத்ததாக செனட் சபைக்கு வரும். அதில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால், அவர்கள் ஒபாமாகேர் திட்டத்திற்கு நிதி அளிக்கும் சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவார்கள். அதே நேரத்தில் அமெரிக்க அரசு கூடுதல் பொது கடன் வாங்கவும் வழி செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவார்கள். செனட்டின் இப்புதிய சட்டம் மீண்டும் பிரிநிதிகள் சபைக்கு செல்லவேண்டும். இவ்வாறு டென்னிஸ் பந்து போல இரு சபைகளுக்கும் இடையே இச்சட்டம் திண்டாடும்.

இச்சட்டம் இருசபைகளில் நிறைவேறவில்லை என்றால் அமெரிக்கா 'டெட்பீட்' நாடாக மாறும். அமெரிக்க அரசின் கடன் பத்திரங்கள் விலை குறையும், பங்கு சந்தை விழும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.

-tamil.thehindu.com

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...