Skip to main content

சுஜாதா & கமல் இணைந்து கலக்கிய விக்ரம் திரைப்படம்-ஒரு அலசல்

நன்றி: giriblog.com 

ரு சில படங்கள் மற்றவர்களை விட நமக்கு ரொம்பப் பிடித்து விடும் அதற்கு பல காரணங்களை நம்மால் கூற முடியும் ஆனால் அதே மற்றவர்களுக்கு நகைச்சுவையாகவோ அல்லது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவோ இருக்கும். அதைப்போல படங்களில் ஒன்று தான் எனக்கு ரொம்பப் பிடித்த “விக்ரம்”. இந்தப்படம் எப்போது பார்த்தாலும் எனக்கு சலிக்காது. அதற்குக் காரணம் படத்தில் உள்ள புதுமை யாரும் (தமிழில்) முயற்சி செய்யாத கதை மற்றும் படத்தில் வரும் வித்யாசமான காட்சி அமைப்புகள், இடங்கள்.


அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையை கடத்தி விடும் கும்பலில் இருந்து எப்படி நாட்டைக் காக்கிறார்கள் என்பதே கதை. இந்தப்படத்தில் பெரிய குற்றச்சாட்டாக படம் வந்த போது கூறப்பட்ட விஷயம் அவ்வளவு முக்கியமான ஏவுகணையை Just like that மூன்று பேர் கடத்தி விடுவதாக காட்டி இருந்தது கடைசியில் விமானத்தில் இருந்து விழும் போது வரும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சில லாஜிக் இடறல்கள். இவை தவிர படத்தில் ரசிக்க எவ்வளவோ காட்சிகள் இருக்க நம்ம மக்கள் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு விட்டார்கள்.


கமலிடம் ஒரு பிரச்சனை ரொம்ப காலம் கழித்து எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து விடுவது தான். இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ படங்களைக் கூறலாம். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அன்பே சிவம் படத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் “சுனாமி” பேரலைகளைப் பற்றி குறிப்பிட்டு இருப்பார். இன்று வரை எனக்கு அது ஆச்சர்யமான விஷயம். இவ்வளவுக்கும் இந்தப்படம் வந்த போது நம்ம ஊரில் கூட சுனாமி தாக்கி இருக்கவில்லை. அப்போது அதை ஒரு சாதாரண காட்சியாக நினைத்தவர்கள் அதை தற்போது பார்த்தால் எப்படிய்யா! இதை அப்பவே சொன்னாரு! என்று நிச்சயம் ஆச்சர்யப்படாமல் இருக்கவே முடியாது.

இதைபோலவே எந்த வித்யாசத்தையும் ரசிக்காமல் கிராமம், வேலை இல்லாத பட்டதாரி கதை, காதல் என்று வழக்கமான முறையில் போய்க்கொண்டு இருந்த போது அமரர் சுஜாதா அவர்கள் மற்றும் கமலின் ஆர்வத்தில் வித்யாசமாக முயற்சிக்க வேண்டும் என்று ஆர்வமுடன் உருவாக்கப்பட்ட படம் தான் விக்ரம். இந்தப்படத்தில் கமலை தவிர வேறு எவரையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு அசத்தலாக நடித்து இருப்பார். கமலை ரொம்ப ரசித்த படங்களில் விக்ரம் முக்கியமானது.
குறைகள் கூற இந்தப்பதிவு நான் எழுதவில்லை. என்னை இந்தப்படம் ரொம்ப கவர்ந்ததால் அதில் என்னை கவர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன் மற்றவை பற்றி சிறு குறிப்பாக துவக்கத்திலேயே கூறி விட்டேன் அதுவே போதும்.

படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே “விக்ரம் விக்ரம்” என்ற வித்யாசமாக படமாக்கப்பட்ட பாடல். இந்தப்படம் வந்த புதிதில் பலரால் முணுமுணுக்கப்பட்ட பாடல் இதுவாகும். பாடலில் வருபவர்கள் அனைவருக்கும் வித்யாசமாக வடிவமைக்கப்பட்ட உடைகள் என்று ஆரம்பமே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. இந்தப்படத்தில் அமரர் சுஜாதா கமல்க்கு பிறகு முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார் என்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் தான். ஒவ்வொரு பாடலையும் வித்யாசமாக கலக்கி இருப்பார் குறிப்பாக ஏஞ்சோடி மஞ்சக்குருவி இப்பவும் நான் அலுக்காமல் கேட்கும் பாடல்.


டைப் அடிக்கும் சத்தத்துடன் வரும் “விக்ரம்” பாடல், “ஏஞ்சோடி மஞ்சக்குருவி” பாட்டில் வரும் வித்யாசமான இசையாகட்டும் அந்தப்படத்தின் பின்னணி இசையாகட்டும் பின்னி பெடலெடுத்து இருப்பார். வழக்கமான இசையாக இல்லாமல் ஒரு விஞ்ஞான கதைக்கு ஏற்ற மாதிரி வித்யாசப்படுத்தி இருப்பார். அதுவும் ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அதற்கு தகுந்த இசை இருக்கும். மொத்தத்தில் இளையராஜா படங்களில் One of the best movies.

படத்தில் கவுரவ வேடத்தில் அம்பிகா கமலுக்கு பொருத்தமான ஜோடிகளில் குறிப்பிடத்தக்கவர். பொருத்தம் என்றால் பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம். “வனிதாமணி” பாடலில் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருந்ததோடு சென்று விடுவார். எனவே அவரைப்பற்றி குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு எதுவுமில்லை. கமல் மீதுள்ள அபிமானத்தில் இந்த சிறு வேடத்தில் அவர் நடித்து இருக்கலாம். குறைந்த நேரமே வந்தாலும் அழகான ரசிக்கும் படியான ரொமாண்டிக் காட்சிகள்.

ஆங்கிலப்படங்களில் என்ன ஜிகினா வேலை செய்தாலும் சூப்பர் சூப்பர் என்று ஏற்றுக்கொள்ளும் மக்கள் நம் தமிழ் படங்களில் நம் அளவிற்கு ஏதாவது முயற்சி செய்தால் எள்ளி நகையாடுவார்கள் அதுபோல ஆனது தான் கமல் துப்பறியும் போது வீட்டு பூட்டைத் திறக்க பயன்படுத்தும் முறைகள். இவ்வளவுக்கும் அதில் கிண்டலடிக்கும் படி எல்லாம் ரொம்ப மோசமாக இருக்காது. ஜேம்ஸ்பாண்ட் தனது கைக்கடிகாரத்தை வைத்து செய்யும் சில்பான்ஸ் வேலைகளில் 10% கூட இருக்காது.

எப்போதுமே ஹீரோ மட்டுமே கலக்கலாக இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்காது உடன் பக்காவான வில்லனும் அவசியம். ரஜினிக்கு ஒரு பக்கா வில்லன் ரகுவரன் என்றால் கமலுக்கு சத்யராஜ். விக்ரம் காக்கி சட்டை போன்ற படங்களே அதற்கு மிகச் சிறந்த உதாரணம். நக்கலும் நையாண்டியுமாக கலக்கி இருப்பார். இந்தப்படத்தில் அவர் நக்கலாக கேட்கும் “நெசமாவா” என்பதும்.. வாய்யா விக்ரம்! இப்படி என்கிட்டே பொசுக் பொசுக்குனு மாட்டிக்குறியே! என்பதும் சத்யராஜை தவிர வேற யார் செய்தாலும் சப்பையாகவே இருக்கும்.

படம் முழுவதும் சுஜாதா அவர்களின் நையாண்டி தெறிக்கும் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கமழும் லிசியும் ராஜஸ்தான் பாலைவனத்தில் போய்க்கொண்டு இருக்கும் போது லிசி கமலிடம்..அடேங்கப்பா! எவ்வளோ பெரிய ஒட்டகம் ..இது மேல எப்படி ஏறி உட்காருவாங்க! என்று ரொம்ப சீரியஸ் ஆக கேட்க அதற்கு கமல் அது குட்டியாக இருக்கும் போதே உட்கார்ந்துப்பாங்க என்று சிரிக்காமல் கூறுவது நமக்கு பலத்த சிரிப்பை வரவழைக்கும். இது போல படம் முழுவதும் வசனங்கள் இருக்கும்.

சலாமியா நாட்டின் (இராஜஸ்தானை சலாமியா நாடாக காட்டியிருப்பார்கள்) ராஜாவாக அம்ஜத்கான் அவரது மகளாக டிம்பிள் கபாடியா அவரின் மனைவிகளுள் ஒருவராக மனோரமா. இந்தக் கதாப்பாத்திரங்களுக்கு இதை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது. அம்ஜத்கான் ராஜவைப் போலவே இருப்பார் என்றால் இளவரசி என்பதற்கு உதாரணமாக அசத்தலாக இருப்பார் டிம்பிள் கபாடியா இளவரசிக்கே உரிய தெனாவெட்டு அழகு உடை என்று பட்டாசாக இருப்பார். கமலுக்கு மச்சம் டிம்பிளை பாம்பு கடித்து கமல் ரத்தம் எடுப்பதில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவருக்குமான தொடர்பு. மன்மதன் கமல் என்பது சரியான வார்த்தை என்பதை “மீண்டும் மீண்டும் வா” பாடல் பார்ப்பவர்கள் அறியலாம்.

ராஜஸ்தான் பகுதி அரண்மனை, எலிக்கோவில், தண்டனை, வித்யாசமான முகமூடியுடன் பாதுகாவலர்கள் என்று அந்த இடமே நம்மை வித்யாசமான சூழலுக்கு கொண்டு செல்லும். நான் ரொம்ப ரசித்த காட்சிகள் இவை. படம் ரொம்ப வித்யாசமாக இருந்தது என்பதை நிரூப்பிக்கும் காட்சி அமைப்புகள் என்று அமரர் சுஜாதா & கமல் கலக்கி இருப்பார்கள்.


மனோரமா இறுக்கமான சூழ்நிலையை கலகலப்பாக்கும் நபர். “நானும் உன்ன மாதிரி கலைக்குழு தான் வந்தேன் இந்த குண்டன் என்னை அந்த புரத்துக்கு தூக்கிட்டு போய் பந்தாடிட்டான்” என்று கூறி ரணகளப்படுத்துவார். இப்ப 16 வது ராணியாக இங்க இருக்கேன் என்று கூறுவதும் அவர்கள் அனைவரும் சிக்கன் சாப்பிடும் போது அரச குடும்பத்தினர் மத குரு துப்பிய பிறகே சாப்பிட வேண்டும் என்று இருப்பதால் மத குரு வரும் போது மொட்டையன் வரான்! மொட்டையன் வரான்!! ..ஐயோ! இவன் துப்பியதை சாப்பிட்டே நான் இப்படி ஆகிட்டேன் என்று கூறுவது செம காமெடியாக இருக்கும்.

இவர்கள் அனைவரைப்போல மனதில் நிற்கும் காதாப்பத்திரம் ஜனகராஜ். சலாமியா! உங்களை வரவேற்கிறது என்று ஆரம்பித்து அதன் பிறகு படம் முழுவதும் நம் வயிற்றை பதம் பார்ப்பார். சலாமியா பொண்ணுக ரொம்ப அழாக இருப்பாங்க. பொண்ணுகளைப் பார்க்காதீங்க கண்ணுகளை நோண்டிடுவாங்க என்று கூறுவதும். கமலுக்கும் டிம்பிளுக்கும் மொழி பெயர்ப்பாளராக வந்து கிட்ட வாயா கிட்ட வாயா கிட்ட வாயானா! என்று ரகளையாகக் கூறி தன்னை விட்டால் யாரும் இதை இவ்வளவு சரியாக செய்ய முடியாது என்று நிரூபித்து இருப்பார்.

மொத்தத்துல ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு இருக்கும். யாரையுமே தேவை இல்லை என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இருக்கும். தமிழ் திரையுலகில் புதிதாக முயற்சி செய்த படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் நிச்சயம் விக்ரம் படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எப்போது பார்த்தாலும் சலிக்காத படங்களில் விக்ரமும் எனக்குண்டு.

இந்தப்பதிவு ஒரு ரஜினி ரசிகனின் சமர்ப்பணம்.

கொசுறு:

விக்ரம் தமிழில் முதன்முறையாக ரூ.1 கோடி செலவழித்து எடுத்த படம்.

அமரர் சுஜாதா அவர்கள் விக்ரம் படம் பற்றி குறிப்பிடும் போது தமிழ் ஜேம்ஸ்பாண்டு பாணி படம் செய்ய விருப்பப்பட்டு கமலுடன் கலந்து பேசி அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர் ராஜசேகரை வைத்து படம் எடுப்பதாக தீர்மானித்து படம் 1986 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நடிகர்கள் கால்ஷீட் பிரச்சனை, பணம் கிடைக்கும் போது அதற்கு தகுந்த மாதிரி படப்பிடிப்பு என்று பிரச்சனை இருந்தாலும் பாதி சரியாகவே போனது ஆனால் ராஜசேகர் அதே சமயத்தில் ரஜினியை வைத்தும் படம் இயக்க ஒப்புக்கொண்டு இருந்ததால் அதில் பிஸியாகி வரவில்லை இதனால் விக்ரம் படத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் மீதியை இயக்குனர் சந்தான பாரதியை வைத்து எடுக்கப்பட்டது. அதன் பிறகு கதையை எப்படி கொண்டு போவது என்பது தெரியாமல் ஒரு ஒழுங்கில்லாமல் சென்று எப்படியோ படத்தை முடித்தால் போதும் என்று ஆகி விட்டதாக” குறிப்பிடுகிறார்.

எனக்கு விக்ரம் படத்தில் எந்த வித்யாசமும் தெரியவில்லை முதலில் இருந்து கடைசி வரை ஒருவரே இயக்கியதைப் போலத்தான் இருந்தது. அதற்கு நிச்சயம் முக்கிய காரணமாக கமல் (உடன் சுஜாதா அவர்கள்) இருந்து இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சுஜாதா அவர்கள் கூறியதைப் படித்த பிறகே எனக்கு சந்தான பாரதி அவர்கள் இயக்கியது தெரியும். இதை படித்த பிறகு தான் உங்களில் பல பேருக்கு இது பற்றி தெரியும் என்று நினைக்கிறேன்.


Comments

Unknown said…
நீங்க சொன்னது எல்லாம் சரி தான் படத்தில் அந்த கால கட்டத்தில் ரசிக்க நன்றாக இருந்தது இப்பஉம் நான் விரும்பும் படம்

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்