Skip to main content

கோடை சுற்றுலா - செலவு அதிகமில்லாத பிச்சாவரம்


கோடை விடுமுறைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்த கோடை விடுமுறையை எவ்வாறு செலவழிக்கப் போகிறோம் என்று திட்டமிடும் நேரம் இது. எனவே, தமிழகத்தில் உள்ள நல்ல சுற்றுலாத் தலங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.


சுரபுன்னைக் காடுகள் இடையே நீண்ட நெடிய நீர்வழிப் பாதைகள்; அதில் படகுச் சவாரி; கண்ணைக் கவரும் தென்னை மரச் சோலைகள், பஞ்சு பஞ்சாய் வானில் மிதக்கும் மேகங்கள்... கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவாரத்தின் எழில் தோற்றம்தான் இவை.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடலோரத்தில் பிச்சாவரம் என்னும் சுற்றுலா தலம் உள்ளது. கடலோரத்துக்கு அருகே அமைந்த வனப் பகுதியில் உள்ள எழில்மிகு மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகளை படகில் சுற்றிப் பார்த்து மகிழும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இந்தியாவில் இரு இடங்களில்தான் தில்லைவனக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. ஒன்று கொல்கத்தாவை ஒட்டிய கடலோர சதுப்பு நிலப் பகுதியில் இந்த மாங்குரோவ் காடுகள் அதிகப் பரப்பில் உள்ளன. அதற்குப்பிறகு தமிழகத்தில் பிச்சாவரத்தில்தான் தில்லைவனக் காடுகள் உள்ளன.
இங்கு சதுப்பு நிலம் - கடலோடு இணைந்த நூற்றுக்கணக்கான மைல் தூரம் கொண்ட ஆழமற்ற நீர்க் கால்வாய்கள் படகுப் பயணத்துக்குப் பாதை வகுத்துத் தருகின்றன.
பிச்சாவரம் உப்பங்கழிப் பகுதியில் சுமார் 1100 நீர்வழிப் பாதைகள் உள்ளன. அவற்றின் ஓரம் பச்சைப்பசேலென்று காணப்படும் சுரபுன்னைக் காடுகள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை.
செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பார்க்கும்போது பிச்சாவரம் தில்லைவனக் காடுகள் சுமார் 1100 ஹெக்டேரில் பச்சை மலை போல் பரந்து விரிந்து கிடப்பதாகத் தெரிவிக்கிறார் அண்ணாமலை பல்கலைக்கழகக் கடல்வாழ் உயிரின ஆய்வு மையப் பேராசிரியர் கதிரேசன்.
பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும். மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.
2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.
இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரபுன்னை மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் காட்சி மிக அற்புதமானது. இந்த அற்புதக் காடுகளின் தன்மையும் அழகும் கெடாவண்ணம் பிச்சாவரம் படகுத் துறைப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பல வசதிகளையும் போதிய பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழகத்தின் தலைசிறந்த சுற்றுலா மையங்கள் பட்டியலில் இதுவும் இடம்பிடிக்கும்.
சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
பிச்சாவரம் புன்னை வனக் காட்டின் மையப் பகுதியில் சுற்றுலாத் துறை விடுதிகள் உள்ளன. இங்கு தங்குவது அத்தனை பாதுகாப்பானது அல்ல என்பதோடு, இங்கு உணவு வசதியும் இல்லை.  வனப் பகுதியின் நுழைவுப் பகுதியில் உள்ள படகுத் துறையில் சிற்றுண்டிகள் கிடைக்கின்றன. பிச்சாவரம் வனப் பகுதி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளைக்கு நகர்ப் பேருந்து வசதி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் தொலைபேசி எண்: 04144-24923 சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739 கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-24227.
சற்று வசதியாக தங்க: சாரதாராம் ஈகோ ரிஸார்ட் (Saradharam Eco Resort ) உள்ளது. 
Arignar Anna Tourism Complex, Pichavaram, Tamilnadu - 608102
Phone: 0091-4144-249399, 9442591466

நன்றி: தினமணி இணைய தளம் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...