Skip to main content

மரங்களின் மரணம்



நடக்க நடக்க விரியும் பாதை... இருபுறமும் செழித்து தழைக்கும் மரங்கள்... மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.. பழங்கள்.. மரங்களில் எட்டிப்பார்த்து கீச்சிடும் பறவைகள்... கொஞ்சும் மாலை வெயில்... மென்நடை...

இத்தனை இனிமையாக ஒரு நடைபயணம் இருக்க முடியுமா? எங்கோ ஒரு கிராமத்தில் இந்த காட்சிகள் கை கூடக்கூடும்....ஆனால்... அன்பாலும்... காதலாலும் பொங்கி பெருகும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்... மனதிற்குள்ளும் கவித்துவமாக ஒரு காட்சி விரியும் என்றால் அதில் மரங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு..

அந்த மரங்களைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வோமா? மரங்களின் மீதான அன்பும், அவற்றுடனான நட்பும் இன்று நேற்றில்லை... நினைவு தெரிந்த நாள் முதல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனக்கும் இருக்கிறது...

இளநிலை படித்த கல்லூரியில் நிறைய பெரிய மரங்கள்... வயதான மரங்கள் இருந்தன.. இன்னமும் இருக்கின்றன. அவற்றை இரு கைகளால் கண்டிப்பாக பிடிக்க முடியாது.. அத்தனை பெரிது... பெயர் தெரியா மரங்கள்... புங்கை... கொன்றை.. சரக்கொன்றை... எத்தனை எத்தனையோ மரங்கள்..

முதுநிலை இதழியல் படித்த கல்லூரியிலோ பெரிய வனமே ஒளிந்திருந்தது..மரங்களின் கூட்டத்திற்கிடையேதான் வகுப்புக்கான நடை பயணம்.. நடக்க நடக்க இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கும்..பசுமை படர்ந்து கொண்டே இருக்கும்.. அங்கு பல மூலை முடுக்குகளை நான் பார்த்ததே இல்லை... அது ஒரு முடிவில்லா மர்ம முடிச்சாக நீண்டு கொண்டே இருக்கும் வனம்.. அங்கு இல்லாத மரங்களே இல்லை... மனிதர்களை விட மரங்கள் மிஞ்சிய வனம் அது.. அந்த சூழல் சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு மட்டுமே சாத்தியமான மிக அழகான சூழல்.. சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் அப்படி ஒரு வனமும்.. அதற்குள் ஒரு கல்லூரியும் இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் இருந்தது. ...

எந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது.. ஒவ்வொரு மரமும் எத்தனையோ ஆயிரம் பேரை.. லட்சம் பேரை பார்த்துவிட்டன. இருந்த இடத்தில் இருந்து நகராமல் வானுக்கும் மண்ணுக்கும் ஒரு மறைமுக பாதையாக இருக்கும் மரங்கள் மழையை பெய்ய வைப்பதிலும்.. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன.

அப்படிப்பட்ட மரங்களில் கிட்டதட்ட ஆயிரம் மரங்கள் அண்மையில் சென்னையில் மரணித்தன. நீலம் புயல் ஆயிரம் மரங்களை வேரறுத்து வீசிவிட்டது. பெரிய பாதிப்பில்லை என்றுபேசப்பட்ட அந்த புயல், ஆயிரம் மரங்களை சாய்த்துவிட்டன. ஆனால் அவற்றால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பற்றித்தான் பேசினோம்... மரங்களின் மரணம் பற்றி யாரும் பேசவில்லை.. இத்தனை மரங்களின் இழப்பால் இயற்கை சூழலுக்கு ஏற்பட்ட வெறுமை பற்றி பேசவேயில்லை...

இதுமட்டும்தானா? தானே புயல் வேரறுத்த மரங்கள் பல்லாயிரம்.. சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் நூற்றுக்கணக்கில்... மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யாரோ விஷமிகள் வைத்த தீயில் பற்றி எரிந்தது பல்லாயிரம் மரங்கள்.. அதில் எத்தனை எத்தனையோ மூலிகை மரங்கள்.. வயதான மரங்கள்..பச்சை குருத்துக்கள்.. கண்ணுக்கு தெரிந்து இத்தனை இழப்புகள்... அவற்றை எப்படி ஈடுகட்டினோம்.? எத்தனை மரங்கள் புதிதாக நடப்பட்டன.? விடை மிக மிகச் சொற்பம்தான்.

மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள் கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த பங்களிப்பை யார் ஈடு செய்வது?

தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண் வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும் மரம்தான் வேண்டும்..

ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர் துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா? அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..

நன்றி: பாமா - புதிய தலைமுறை இணைய தளம் 

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...