Skip to main content
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு 

இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி.

இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).

 பதிவு # 1:

சிவாஜி கணேசன்...

தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..

இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.

ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.

ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..

இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.

என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும்விட்டுப்போயிருந்தாலோ, தவறிருந்தாலோ, அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.

இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..

தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.

அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.

பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

பராசக்தியில் சிவாஜி 
 1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)

பூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம் ஓரளவு வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..கதாநாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.அன்பு ஒரளவு ஓடியது.மற்றவை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.

திரும்பிப்பார் படத்தில் சிவாஜி
பதிவு # 2:

1954ல் இவர் நடித்து வெளிவந்த படங்கள்

மனோகரா, இல்லறஜோதி, அந்தநாள், கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி, துளிவிஷம், கூண்டுக்கிளி, தூக்கு தூக்கி, எதிர்பாராதது. இவைத் தவிர..மனோகரா..ஹிந்தி மற்றும் தெலுங்கு.


மனோகரா...மீண்டும் கலைஞர்..கதை வசனம்.மாபெரும் வெற்றி பெற்ற..படம்..பராசக்தி..கோர்ட் காட்சி வசனம் போல்...இப்படத்திலும்...கிளைமாக்ஸில்..கண்ணாம்பா,சிவாஜி வசனங்கள்..தனியாக இசைத்தட்டாகவே வந்து..அனைவராலும் முணுமுணுக்கப்பட்டவை. இப்படத்தில்..கிரிஜா என்னும் நடிகை நடிகர் திலகத்தின் ஜோடி.டி.ஆர்.ராஜகுமாரி,எஸ்.ஏ.நடராஜன்..வில்லி..வில்லன்.

மனோகராவில் சிவாஜி 


இல்லறஜோதி..கண்ணதாசன்..கதை..வசனம்..படம் எதிர்ப்பார்த்த அளவு பேசப்படவில்லை.

எஸ்.பாலசந்தர் கதை வசனத்தில் வந்த படம்..அந்தநாள்.தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.,சிவாஜிக்கு..வில்லத்தனமான கதானாயகன் பாத்திரம்.தேசதுரோகம் செய்யும் அவரை..அவர் மனையாக வரும் பண்டரிபாயே கொலை செய்துவிடுவார்.(பின்னாளில்வந்த கே.பாலசந்தரின்..அச்சமில்லை..அச்சமில்லை.ஞாபகம் வருகிறதா?)அந்தநாளில்..அந்தநாள் தான் பாடல்களே இல்லாமல் வந்த முதல் தமிழ் படம் எனலாம்.

(என் கருத்து: அந்த நாள் திரைப் படம் ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட ஒரு அருமையான படம். சிவாஜியின் கதாபாத்திரம் அந்த காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே பெரும்பாலான கதாநாயகர்கள் நடிக்க மிகவும் யோசிக்கும் ஒரு நெகடிவ் ஆன வேடம்வேடம். ஆனால், சிவாஜி மிகவும் சவாலுடன் அதை ஏற்று அதில் திறம்பட நடித்து வெற்றியும் பெற்றார்).

அந்த நாள் படத்தில் சிவாஜி 
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி...நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து..பி.ஆர்.பந்துலு எடுத்தபடம்.பத்மினி காதானாயகி.படம் வெளிவந்த போது..எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றாலும்..இரண்டாவது..மூன்றாவது ஓட்டங்களில்..வசூலை குவித்தது எனலாம்.

துளிவிஷம்...சிவாஜி வில்லன் பாத்திரம்..பாரதிதாசன் கதை என்பதைத் தவிர..சொல்ல ஒன்றுமில்லை.

கூண்டுக்கிளி....தமிழ்த் திரையில்..புரட்சி நடிகரும்..நடிகர் திலகமும் நடித்து வந்த ஒரே படம்.டி.ஆர்.ராமண்ணா தயாரிப்பு..இயக்கம்.பி.எஸ்.சரோஜா நாயகி.சிவாஜிக்கு வில்லன் பாத்திரம்..படம் ஏனோ படு தோல்வி. 

கூண்டுக்கிளி-எம்.ஜி.ஆர் சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் 

எதிர்பாராதது..ஸ்ரீதரின் கதை வசனம்.நாயகனின் நாயகி (பத்மினி)யே..எதிர்பாராமல்..நாயகனுக்கு அம்மா வாகிறார்.(மூன்று முடிச்சு?).படம் வெற்றி. சிற்பி செதுக்காத பொற்சிலையே..என்ற ஏ.எம்.ராஜாவின் பாடல் இன்றும் கேட்க இனிமையானது.

தூக்கு தூக்கி...என்ன சொல்ல முடியும்..வெற்றி..வெற்றி...வெற்றி..தான்.இன்றும் இப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு.பத்மினி.லலிதா,ராகினி,பாலையா..இப்படி நட்சத்திரக் கூட்டம்.இப்படப் பாடல்களைப் பாட..திருச்சி லோகனாதனைக் கேட்டார்களாம்.அச்சமயத்தில் பீக்கில் இருந்ததால்..அவர் அதிகத் தொகைக் கேட்க தயாரிப்பாளர்கள்..அவ்வளவு முடியாது என உரைக்க ..அப்போ..மதுரைல இருந்து ஒரு பையன் வந்திருக்கான் ..அவனை பாடச்சொல்லுங்க..என்றாராம்..லோகநாதன். அந்த பாடகர்தான்..டி.எம்.எஸ்.,

(என் கருத்து : இந்த அருமையான படத்தை நான் மிக சமீபத்தில்தான் ராஜ் டிவியில் பார்த்தேன். "கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, உயிர் காப்பான் தோழன், கொலையும் செய்வாள் பத்தினி" என்ற ஐந்து உண்மைகளை வைத்துக் கொண்டு மிக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம். திருவிதாங்கூர் சகோதரிகள் என்று சொல்லப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் இணைந்து நடித்த படம்).

பெண்களை நம்பாதே...ஏறாத மலைமேலே..அபாய அறிவிப்பு, சுந்தரி சௌந்தரி..குரங்கிலிருந்து போன்ற அற்புதமான பாடல்கள் நிறைந்த படம் இது. 

தூக்கு தூக்கியில் பத்மினி, ராகினியுடன் சிவாஜி 
 பதிவு #3:

1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி


மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.


நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

தெனாலி ராமன்-சிவாஜி 


பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

மேலும் நண்பர் ஜோ தரும் அதிகத் தகவல்கள்

வருடம் - 1954 & 1955

1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

மனோகரா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

எதிர்பாராதது

9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]

1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.

படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு

வெளியான நாள் - 14.01.1956

2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை

நான் பெற்ற செல்வம் - 14.01.1956

நல்ல வீடு - 14.01.1956

நானே ராஜா - 25.01.1956

தெனாலி ராமன் - 03.02.1956

பெண்ணின் பெருமை - 17.02.1956

ராஜா ராணி - 25.02.1956

3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.

4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை

சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.

சேலம் - நியூ சினிமா

திருச்சி - ஜுபிடர்

5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.

6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.

7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - அமர தீபம்

அரங்கு - காசினோ

8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.

9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா

பதிவு #4:

1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பத்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பேசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

பதிவு #5:

1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்:

உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம்
பொம்மைக்கல்யாணம்
அன்னையின் ஆணை
சாரங்கதாரா
சபாஷ் மீனா
காத்தவராயன்
பொம்மல பெள்ளி (தெலுங்கு)

உத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி.

(என் கருத்து : யாரடி நீ மோகினி...பாடல் மட்டுமே போதும் இந்த படத்தின் வெற்றியை சொல்ல. அருமையான படம். இரண்டு வேடத்தில் சிவாஜி கலக்கியிருப்பார்.  Man in the Iron Mask என்ற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இணையத்தளத்தில் இந்தப் படத்திற்கான ஸ்டில் தேடினால், முழுக்க, முழுக்க அந்த பல்லி  நடிகரின் பட ஸ்டில்கள் தான் கிடைக்கின்றன-என்ன கொடுமை சார் இது??).

உத்தமபுத்திரன்-சிவாஜி 
பதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி

சம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.

பொம்மைக்கல்யாணம்..ஜமுனாவுடன் நடித்தார்...படம்..தோல்வி

அன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம். (அன்னையின் ஆணை - சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்ற படம்)

சாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை. (என் கருத்து : வசந்த முல்லை போலே வந்து...என்ற மிக அருமையான பாடல் இந்த படத்தில் உண்டு. சிவாஜி (டி.எம்.எஸ் குரல் ) பாட ராஜசுலோச்சனா ஆடுவார்).

சபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்.

காத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்

இதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.

பதிவு தொடரும்  

(நன்றி: நண்பர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு)....


Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...