Skip to main content

மரணம் இல்லா மரிலின் மன்ரோ


ஜூன் 1, 1926 ஆண்டு பிறந்த நார்மா ஜீன் மார்டென்சன் தான் பின்னாளில் உலகம் போற்றும் மரிலின் மன்ரோ ஆனார்.


தனது 20 ஆவது வயதில் மாடலாக ஆரம்பித்த தொழிலை ஆரம்பித்த மரிலின், திரைத் துறையில் நுழைந்து புயல் வேகத்தில் முன்னேறினார். நடிக்க வந்து 10 ஆண்டுகளில் அவர் ஜோடி சேராத புகழ் பெற்ற நடிகரோ, அவரை வைத்து இயக்காத இயக்குனரோ இல்லை என்றே சொல்லலாம்

மரிலின் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில்தான் உலகப் புகழ்பெற்ற பேஸ் பால் வீரர் ஜோ டி மாஜியோ (Joe de Maggio) அவருக்கு அறிமுகமானார். "நயாகரா' படத்தில் நடிப்பதற்காக மர்லின் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காகச் சென்றபோது, விளையாட்டுத் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த 37 வயதான ஜோவும் உடன் சென்றிருந்தார். இரண்டாண்டுகள் இருவரும் நெருங்கி பழகிய பின்னரே ஜோவைத் திருமணம் செய்து கொள்ள மரிலின் சம்மதித்தார். 15 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் 200 புகைப்படக்காரர்கள் சூழ இவர்கள் திருமணம் நடந்தது. தேனிலவுக்கு போகும் வழியில் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு ஜோ ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிருபர்கள் அனைவரும் மரிலினிடம் கேள்வி கேட்டார்களே தவிர, ஜோவை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.

துவக்கத்திலிருந்தே இத்திருமணம் தவறாக கருதப்பட்டது. ஜோவின் பொறாமைக் குணம் பிரச்னைக்கு காரணமாயிற்று. அந்த நேரத்தில் வெளிவந்த மரிலினின் "தி செவன் இயர் இட்ச்' (The Seven Year Itch) படத்தில் காற்றில் அவரது கவுன் பறக்கும் காட்சி ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.படம் வெளிவந்த இரண்டாவது வாரத்தில் இருவருமே விவாகரத்து பெற்றனர். 


விரைவிலேயே திரைக்கதாசிரியர், எழுத்தாளர் ஆர்தர் மில்லரை (Arthur Miller) சந்தித்த மரிலின் காலம் தாழ்த்தாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். தனக்கு ஓர் ஆதரவு தேவை என்பதற்காக திருமணம் செய்து கொண்டாரே தவிர, குடும்பம் நடத்தக்கூடிய பக்குவத்தில் அவர் இல்லை. எடை பெருக்கம், குடிப்பழக்கம், உடல்நலக் குறைவு போன்றவை மரிலினின் வாழ்க்கையை நிலை குலைய வைத்தது. இரண்டாண்டுகளுக்குப்  பின்னர் ஞாபக மறதி, உற்சாகமின்மை, போதை மருந்து, தூக்க மாத்திரை பழக்கம் போன்றவை மேலும் அவரது வாழ்க்கையை பாதித்தது. நிலையற்ற மணவாழ்க்கையோடு நீண்ட காலமாக எதிர்பார்த்த குழந்தை கருவிலேயே கலைந்தது போன்ற நிகழ்ச்சி அவரை மேலும் பாதித்தது.

அவரது மருத்துவர்  ரால்ப் கிரீன்சன் (Ralph Greensan), அதிக சக்தி கொண்ட 300 மி.கி. நெம்புடால் (Nembutol) என்ற மாத்திரையை உட்கொள்ள அனுமதித்தாராம். இது இருவாரங்களுக்கொரு முறை 100.மி.கி. அளவு மட்டுமே உட்கொள்ளலாமென்று மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.
  
மீண்டும் விவாகரத்து, படங்களும் தோல்வி, புதிய படங்களும் இல்லை என்ற நிலையில் 1962-ம் ஆண்டு திடீரென அவரது வாழ்க்கையில் புதிய மனிதரொருவர் இடம் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் கென்னடிதான் அவர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்போதுதான் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவர்களிருவரும் அடிக்கடி சந்தித்திருந்தாலும் அவர்களுடைய உறவு அளவுக்கு மீறி வர்ணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போன்று மரிலின் மரணத்திற்குப் பின்னர் ஜான் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடியையும் இணைத்து வதந்திகள் பரவின. ஒவ்வொரு முறையும் மக்கள் சூழ்ந்திருந்த சந்தர்ப்பங்களில்தான் இவர்களுடைய சந்திப்புகள் நிகழ்ந்தன.

மர்லின் நடித்த கடைசிப்படம் "சம்திங் காட் டு கிவ்' (Something Got to Give). இந்தப் படத்தில் அவர் உடல் நலமின்றி இருந்தார். கென்னடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்ட இவரை ஃபாக்ஸ் ஸ்டூடியோ தடுத்தது. அதையும் மீறி இவர் புறப்பட்டுச் சென்றார். மெடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மரிலின்தான் பிரதான விருந்தினராகக் கருதப்பட்டார்.

மரிலினின் 36-வது பிறந்தநாளின்போது முன்னாள் கணவர் ஜோ டி மாக்சியோ மீண்டும் அவருடன் இணைந்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர்களிருவரும் இணைந்தபோது முன்னைவிட மகிழ்ச்சியாக இருப்பதாகவே உணர்ந்தனர். வாழ்க்கையில் பொறுமையும், முதிர்வும், ஏற்பட்டிருப்பதை உணர்ந்த மரிலின், மீண்டும் ஜோவைத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்.

1962-ம் ஆண்டு ஜூலை மாத இறுதி வாரத்தில் ஒருநாள் மரிலின் வீட்டிற்கு பிரபல பாடகர்/நடிகர்  பிராங்க் சினட்ராவும் (Frank Sinatra), கென்னடியின் மைத்துனரான பீட்டர் லாஃபோர்டும் (Peter Lawford) விருந்தினராகச் சென்றனர். அப்போது என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியவில்லை. அளவுக்கு மீறி நெம்புடால் மாத்திரையை மரிலின் உட்கொண்டதாகவும், அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனாலும் ஜோவுடன் மரிலின் திருமண வரவேற்பு குறித்து திட்டமிட்டதாகவே சொல்லப்பட்டது.

1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி விடியற்காலை படுக்கையில் மரிலின் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விடியற்காலை 4.25 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டபோது வீட்டு வேலைக்காரி வாஷிங்மெஷினை இயக்கிக் கொண்டிருந்தாராம். மரிலின் உடல்மீது எவ்வித காயங்களும் இல்லை. தற்கொலைக்கான கடிதமும் இல்லை. டாக்டர்களின் கருத்துக்கு மாறாக தற்கொலை என முடிவெடுக்கப்பட்டது.

அதிக அளவில் தூக்க மாத்திரையை உட்கொண்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் உடலில் விஷத்தை செலுத்திய அறிகுறி தெரிந்தது. போஸ்ட் மார்ட்டத்தில் உடல் உறுப்புகள் நிறம் மாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது டாக்டர் ரால்ஃப் கிரீன்சன் மரிலினுடன் இருந்துள்ளார். விடியற் காலையில் அவரது வேலைக்காரி வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்க வேண்டிய அவசியமென்ன என்பதும் மர்மமாகவே இருந்தது. சாட்சியத்தை மறைக்க துணிகளை துவைத்தாரா? டாக்டருக்கும் வேலைக்காரிக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. புதியதொரு வாழ்க்கையை துவங்க நினைத்திருந்த நேரத்தில் நிகழ்ந்த மரிலினின் மரணம், ஹாலிவுட் நடிகைகளிலேயே மறக்க முடியாத சம்பவமாக இன்னும் உலவி வருகிறது.


ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் மரிலின் மன்ரோவின்  மரணம் இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அவரது மரணத்திற்கு காரணமாக சிஐஏ மட்டுமின்றி மாஃபியா, அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி என பலரது பெயர்களும் சுட்டிக்காட்டப்பட்டன. ஆண்டுதோறும் அவரது நினைவு தினத்தன்றுஅவரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்த வண்ணம்உள்ளது. நடிகைகளிலேயே அதிக அளவில் எழுதப்பட்டு விற்பனை ஆவது மரிலின் மன்ரோ பற்றிய புத்தகங்கள்தாம். 

கடந்த வருடம் ஜூன் மாதம், மரிலின் மன்ரோவின் 26 அடி உயர சிலை (7500 கிலோ எடை) அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நிறுவப்பட்டது. 

 
பல தீவிர ரசிகர்கள் இதைப் பாராட்டினாலும், பெரும்பாலானோர் இது தேவையா? என கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு வரவே, இந்த பிரமாண்டமான சிலை இந்த வருடம் மே மாதம் அகற்றப்பட்டது. 


வாழும்போது இருந்ததைப் போலவே இறந்த பிறகும் மரிலின் சர்ச்சைக்குரியவராகவே இருக்கிறார். 

கட்டுரை செய்தி : நன்றி-தினமணி இணைய தளம் 


 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்