Skip to main content

இறப்பதற்கு முன் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய 5 ரகசியங்கள்: படித்ததில் பிடித்தது


ஜான் பி.இஸோ (John B .Isso) எழுதிய The  Five Secrets You Must Discover Before You Die என்ற மிக அருமையான புத்தகத்தை (178 பக்கங்கள் மட்டுமே) இன்று ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

வாழ்வின் குறிக்கோள் என்ன, நாம் வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும், அமைதியான, மகிழ்வான வாழ்வு வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச் சுருக்கமாக, மிகத் தெளிவாக (lucid) கூறும் நூல் இது.

கோடீஸ்வரனாக வேண்டும், சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும், டெண்டுல்கர் போல் ஆக வேண்டும் என்றெல்லாம்  உசுப்பேற்றாமல்  யதார்த்தமான விஷயங்களை சொல்லி இருக்கிறார் இந்த புத்தக ஆசிரியர்.

ஒரு முழுமையான, அர்த்தமுள்ள வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களை தேடிப் பிடித்து கிட்டத்தட்ட 200 பேருக்கும் மேல் இன்டர்வியு செய்து அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்னென்ன செய்தார்கள்/செய்கிறார்கள் என்று அலசி, அதை 5 ரகசியங்களாக மாற்றி இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஜான்.

பணம் இருக்கிறதோ இல்லையோ, வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியுடன் வாழும் நிறையப் பேரை நாம் பார்த்திருப்போம்; பணம், வசதி, சொகுசு வாழ்வு என்று எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லாமல், எதிலுமே ஈடுபாடு இல்லாமல் ஒரு வித விரக்தியுடன் இருக்கும் மனிதர்களையும் பார்க்கிறோம். ஜான் இந்த வேறுபாட்டை காரணம் காண முயன்றிருக்கிறார். 

அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் என்னைப் போன்ற பலருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஊருக்கு போவதானாலும் (உள்நாடு/வெளிநாடு) ட்ரிப் அட்வைசர் (Trip Advisor) என்ற வலைத் தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட ஊரில் எங்கு தங்கலாம், எங்கு சாப்பிடலாம், எந்தெந்த இடங்களை சுற்றி பார்க்கலாம் என்று பார்ப்பது உண்டு. இதற்கு முன் பயணம் செய்த பலபேர் வேலை மெனக்கெட்டு தான் பெற்ற இன்பங்களை/நல்ல அனுபவங்களை/துன்பங்களை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்க்கை அனுபவமும் அது போலத்தான் என்கிறார் ஜான். வாழ்க்கையில் நிறைவாக, மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் நாம் ஏன் கருத்து கேட்கக்கூடாது?

இதற்காக ஜான் ஒரு குழுவுடன் நிறைய நாடுகளுக்கு பயணம் செய்து, தான் கற்றுக் கொண்ட விஷயங்களை இதில் விளக்கியுள்ளார். சுருக்கமாக அந்த 5 ரகசியங்கள் என்ன, என்ன என்று பார்ப்போம்:

ரகசியம் #  1 :உனக்கு நீ உண்மையாக இரு

கடவுள் நம்பிக்கை  இருக்கிறதோ இல்லையோ, உன் மேல் உனக்கு நம்பிக்கை வேண்டும். உனக்கு நீ உண்மையாக இல்லை என்றால், எவ்வளவு பணம் வந்தாலும் வாழ்வில் நிம்மதி வராது.

ரகசியம் # 2 : எதையும் நினைத்து வருந்தாதே 

பின்னாளில் வாழ்க்கையில் ஐயோ, இப்படி செய்துவிட்டோமே என்று நினைத்து வருந்தும் அளவுக்கு எந்தத் தவறையும் நாம் செய்யக்கூடாது. ஒருவேளை, அப்படி ஏதேனும் செய்துவிட்டால் பின்னர் அதை நினைத்து, நினது தூக்கத்தையும், நிம்மதியையும் இழப்பது அர்த்தமற்ற செயல். இதனால் நம் வாழ்வு வீணாகிவிடும்

ரகசியம் # 3 : அன்பாக மாறு 

வேறெந்த  முயற்சியும் செய்ய வேண்டாம்; வாழ்க்கையில் எல்லோரிடமும் அன்பாக, பகைமை பாராட்டாமல் இருந்தாலே போதும் என்கிறார் ஜான். பிறரிடம் அன்பாக இருப்பது என்பது மிகச் சுலபமான செயலே, முயற்சித்துப் பாருங்கள்.

ரகசியம் # 4 : இன்று வாழ கற்றுக்கொள் (live the moment ):

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகத்தில் "carpe diem" என்றொரு லத்தீன் வார்த்தை வரும்; அதன் அர்த்தம் "இன்று வாழு (enjoy the day)"  என்பதாகும். சமீபத்தில் வெளிவந்த 180 படத்தின் கதாநாயகன் கூட இப்படி சொல்வதாக ஒரு காட்சி இருக்கிறது. நேற்று என்பது இறந்த காலம், நாளை என்பது நிச்சயமில்லை. இன்று என்பதே நிச்சயம். இன்று நாம் மகிழ்ச்சியுடன் இருந்தாலே பெரிய விஷயம், நாளை என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி நினைக்காமல் இன்றைய நாள் மகிழ்சியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நல்ல சாப்பாடு சாப்பிடாமல், நல்ல உடை உடுத்தாமல், வெளியே எங்குமே செல்லாமல் வாழ்நாள் பூராவும் சேர்த்து வைத்து என்ன பயன் என்று தெரியாமலேயே நிறைய பேர் பணம், பணம் என்று சேர்த்து வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வாழ்வு நிறைவாக இருக்காது, இவர்கள் குழந்தைகள் சந்தோஷமாக வளரமாட்டார்கள். பெற்றோரை மதிக்க மாட்டார்கள். இது போன்றோரின் கடைசி காலம் மிகுந்த துன்பமாகவே இருக்கும் என்கிறார் ஜான்.

ரகசியம் #5 : நீ அடைவதைவிட  அதிகமாக கொடு:

Bill Gates, Warren Buffet போன்ற உலக மகா கோடீஸ்வரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். குழந்தையே இல்லாமல் இருக்கும் நிறைய பேர் வாழ்க்கையை வாழத் தெரியாமல், தேவையே இல்லாமல் கஞ்சத்தனமாக இருப்பதை பார்த்திருப்போம். இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள்? இறந்த பிறகு இவர்களுடைய சொத்து யாருக்கு பயன்படப் போகிறது?

மகிழ்ச்சியாக வாழ்ந்தால், மகிழ்வுடன் நிம்மதியாக இறக்கலாம். 

இதில் என்ன புதுமை? நமக்கு தெரியாத புதிய விஷயம் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லையே என்று சிலர் நினைக்கலாம்; உண்மைதான். ஆனால், எதையுமே நாமாக புரிந்து கொள்ளாமல், வாழ்க்கை கடினமாக இருக்கிறது, சுவாரசியம் இல்லாமல் இருக்கிறது என்பவர்களுக்கு இது ஒரு நல்ல ஊக்கியாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...