Skip to main content

அன்நோன் (Unknown)-ஆங்கிலப் பட விமர்சனம்



லியம் நீஸன்ஒரு தேர்ந்த ஹாலிவுட் நடிகர். ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List) , ராப் ராய் (Rob Roy), மைக்கேல் காலின்ஸ் (Michael Collins) போன்ற அருமையான படங்களில் நடித்துள்ளவர். சமீபத்தில் வெளிவந்த டேக்கன் (Taken) படம் ஒரு மிக விறுவிறுப்பான படம். இளம் பெண்களை கடத்தி, விபச்சாரத்திற்கும், கையாகாலாத கிழவர்களின் காம லீலைகளுக்கும் இரையாக்கும் ஒரு கும்பலை தேடிச்சென்று வேட்டையாடி அழிக்கும் இந்தப் படம் வணிக ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓகே, அன்நோன் (Unknown ) படம் எப்படி என்று பார்ப்போம்: நாயகன் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் (லியம் நீஸன்)  தனது மனைவி எலிசபெத்துடன் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகருக்கு ஒரு பயோ-டெக்னாலஜி மாநாட்டிற்கு வருகிறார். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கப்போகும் ஹோட்டலுக்கு வரும்போது, தன்னுடைய கைப்பெட்டி (brief case) தொலைந்து போய்விட்டது என்று உணர்ந்து, அதில் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் முக்கியமான விஷயங்கள் இருப்பதால், மனைவியை ஹோட்டலில் விட்டுவிட்டு இன்னொரு டாக்சியில் மறுபடியும் விமான நிலையத்திற்கு செல்கிறார். போகும் வழியில் ஏற்படும் ஒரு விபத்தில் அவர் பயணிக்கும் கார் தண்ணீரில் மூழ்கிவிட, மார்ட்டின் தனது சுயநினைவை இழக்கிறார்.

நான்கு நாட்கள் கழித்து கண் விழித்து (கண்களை விழித்து என்றுதானே இருக்க வேண்டும்? ஏன், எல்லோருமே கண் விழித்து என்று ஒருமையில் சொல்லுகிறோம்? குடும்ப ஆட்சி நடத்தும் தமிழ் தாத்தாவிடம்தான் கேட்க வேண்டும்) பார்க்கும்போது அவருக்கு மெதுவாக தன்னைப் பற்றிய ஞாபகங்கள், துண்டு துண்டாக, வருகின்றன. தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு விரைகிறார், டாக்டர் மார்ட்டின். அங்கு அவர் மனைவி உட்பட அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவருக்கு தன்னை நிரூபிக்க எந்த விதமான ஆவணங்களும் இல்லாததால், அவரை ஹோட்டல் நிர்வாகம் வெளியேற்ற முற்படுபோது, டாக்டர் மார்ட்டின் என்று சொல்லிக் கொண்டு வேறு ஒரு ஆள் அங்கு இருப்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைகிறார் நாயகன்.

தான் யார் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் மறுபடியும் தான் இருந்த மருத்துவமனைக்கே செல்கிறார் மார்ட்டின். அங்கு இருக்கும் ஒரு நர்ஸ், இவரைப் பார்த்து பரிதாப்பட்டு தன்னுடைய நண்பர் ஒருவரின் விலாசத்தைக் கொடுத்து அவரைச் சென்று பார்க்குமாறு சொல்கிறார். இடையில், கார் விபத்து நேரிட்டபோது அந்த காரை ஓட்டிய பெண் டிரைவரையும் சந்திக்கிறார் மார்ட்டின். என்ன ஆனாலும் தான் யார் என்பதைக் கண்டுபிக்கவேண்டும் என்று போராட ஆரம்பிக்கிறார் டாக்டர் மார்ட்டின். அவருடைய போராட்டங்களின் முடிவில் ஏகப்பட்ட திருப்பங்களுடன் முடிகிறது படம்.

திரைக்கதை நன்றாக இருக்கிறது, காட்சிகள் வேகமாக நகர்கின்றன, ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கும் அளவு துல்லியமாக இருக்கிறது, லியம் நீஸன் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னாலும், மாட் டாமன் (Matt Damon) நடித்த Bourne Identity , ஹாரிஸன் போர்ட் (Harrison Ford) நடித்த பிரான்டிக்   (Frantic) போன்ற படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

நாயகனுக்கு உதவி செய்ய வந்து, பின் சயினைட் சாப்பிட்டு மடியும் சின்ன கதாபாத்திரத்தில், ஜெர்மன் மொழியில் வந்து மிகப் புகழ் பெற்ற Downfall  என்ற படத்தில் ஹிட்லராக பிரமாதமாக நடித்த நடிகர் வருகிறார். பெண் டிரைவராக வரும்  சிறிய வேடத்திற்கு டையேன் க்ருகர் (Diane Kruger) போன்ற தேர்ந்த நடிகை எதற்கு என்று புரியவில்லை. பல வருடங்களுக்கு முன் டிராகுலா வேடங்களில் வந்து பிரமாதப்படுத்திய பிரான்க் லாங்கெல்லா (Frank Langella) ஒரு சிறிய வில்லன் வேடத்தில் வருகிறார். பாவம், தலை வேறு சொட்டையாகிவிட்டது.

ஒன்றரை மணி நேரம் பொழுதுபோகும் அளவுக்கு படம் ஓக்கே என்று சொல்லலாம்.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...