Skip to main content

மாருதி நிறுவனத்தின் "கஸ்டமர் கேர் சர்வீஸ் " எனும் கஸ்டமர் டோன்ட் கேர் சர்வீஸ்

 
கடந்த சில நாட்களுக்கு முன் அலுவலக வேலையாக (சத்தியமா) பாண்டிச்சேரி சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, மகாபலிபுரம் தாண்டி பட்டிபுலம் எனும் இடம் வரும்போதும் என்னுடைய கார் தீடிரென நின்றுவிட்டது. சென்ற மாதம்தான் முழுதாக சர்வீஸ் செய்து வண்டி பக்கவான நிலையில் இருந்தபோது இது எதனால் என்று புரியாமல் மாருதியின் கஸ்டமர் கேர் சர்விஸ் எண்ணைத் தொடர்புகொண்டேன்.

பின்னிரவு நேரம், சுற்றிலும் கும்மிருட்டு, அருகில் கடைகள் எதுவுமில்லை, எனக்கோ கார் ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது, என் நண்பருக்கோ அது கூட தெரியாது.

கஸ்டமர் கேர் நண்பர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு கார் நின்றுபோனதை சொன்னவுடன், இடத்தைக் கேட்டார். முட்டுக்காடு முதலைப் பண்ணை அருகே என்றவுடன் வேறு ஏதாவது அடையாளம் சொல்ல முடியுமா என்றார், மகாபலிபுரம் அருகே என்றேன், வேறு ஏதாவது என்று அந்தாள் மீண்டும் கேட்கவே சென்னைக்கு அருகே என்றேன்.

இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக சொல்லக் கூடாது, சரியாக சொன்னால்தான் கஸ்டமர் கேர் சர்வீஸ் ஆள் வருவார் என்று எரிச்சலூடியபோது, நீ எங்கிருந்து பேசுகிறாய் என்று நான் கேட்டேன். டெல்லியிலிருந்து என்றான் அந்த பன்னாடை. எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. கால் சென்டர் கலாசாரத்தின் உச்சக்கட்ட அபத்தம் இதுதான். சென்னை அருகே ஒரு அத்துவானக் காட்டில் என் கார் நிற்கிறது, கஸ்டமர் கேர் அதற்கு டெல்லியில் உள்ள கால் சென்டரில் சென்னையைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவன் என் கழுத்தை அறுக்கிறான்.

அவனிடம் சென்னை எண் ஏதாவது இருந்தால் குடு என்று வாங்கிக் கொண்டு சென்னை எண்ணைக் கூப்பிட்டால்  பதில் இல்லை. பிறகு ஜஸ்ட் டயல் எண்ணைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் நான்கைந்து எண்களைக் கொடுத்தார்கள். ஒவ்வொன்றாக சுற்றியபோது யாருமே எடுக்கவில்லை. கடைசியாக அடையாரில் உள்ள கார்ஸ் இந்தியா என்ற மாருதி டீலர் கடையில் ஒரு ஆள் எடுத்தார். அவரிடம் புகார் கொடுத்தவுடன், "சார், சென்னை நகர் எல்லைக்கு அப்பால் நீங்கள் இருப்பதால் நான் எதுவும் செய்ய முடியாது," என்றார். அடப்பாவி, நிற்கிற காருக்கு அது சென்னை எல்லைக்கு உள்ளேயா, வெளியேயா என்று எப்படிதெரியும்?

அந்த ஆளிடம் ரொம்பவும் கேட்டுக் கொண்டபின், "சரி, வருகிறேன், ஆனால் மினிமம் ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகும், கட்டணம் ரூ.850, அதற்கு மேல் ரிப்பேர் செலவு என்றார். அப்பா, நீ வந்து சேர்ந்தால் அதுவே போதும் என்றேன். மறுபடியும் இருட்டில் காத்திருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த பின்னும் அந்தாளைக் காணவில்லை, சரி என்று அந்தாளின் அலை பேசியில் தொடர்பு கொண்டால், "வண்டி ஓட்டும்போது நான் யார்கிட்டயும் பேச மாட்டேன், இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன், சும்மா சும்மா கூப்பிடாதீங்க," என்றார் அந்த ஆள். அடப்பாவி, கார் ஓட்டும் போது காதில் ஹெட் போன் போடக் கூடாதா என்று கேட்க முடியவில்லை. படக்கென்று கோபித்துக் கொண்டு திரும்பவும் சென்றுவிட்டால், எனவே வாயை மூடிக் கொண்டு காத்திருந்தேன். 

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து வந்து சேர்ந்த அந்த மெக்கானிக் காரின் டைமிங் பெல்ட் போய்விட்டது என்றார், இந்த மாதிரி டைம் பார்த்து புட்டுக் கொள்வதால்தான் அதன் பெயர் டைமிங் பெல்டா? சபாஷ்.

பிறகு, புது பெல்ட் போடவேண்டும் அதன் விலை ரூ.695/- அதற்கு தனியாக லேபர் சார்ஜ் ரூ.550 என்றார். பகல் கொள்ளை போல இது பின்னிரவுக் கொள்ளை. சரி, சரி வேலையை முடியுங்கள் என்றேன். புது பெல்டை எடுத்து மாட்ட முயன்ற போது, அவருடைய அலைபேசியில் அழைப்பு வந்தது. தசாவதாரம் நாயுடு போல எஸ் சார், எஸ் சார் என்று சொல்லி பேச ஆரம்பித்த போது அது அவருடைய உயரதிகாரி என்று புரிந்துகொண்டேன். கிட்டத்தட்ட 15 நிமிடம் பேசிவிட்டு, "ஒரே நாய் பொழப்பு சார் இது, எவனோ புதுசா கார் டெலிவரி எடுத்த ஒடனே கார்ல ரிப்பேராம், இப்பவே ஆதம்பாக்கம் போன்னு எங்க டீஜிஎம் சொல்றாரு," என்று சொல்லிவிட்டு அவர் வேலையைத் தொடர முயற்சிக்கும்போது மறுபடியும் அலைபேசி அழைப்பு, மறுபடியும் ஒரு 20 நிமிடத்துக்கு எஸ் சார், எஸ் சார் பேச்சு. அந்த மெக்கானிக்கை போட்டு சவட்ட வேண்டும் என்று வந்த வெறியை கிடப்பில் போட்டுவிட்டு பொறுமையாக நின்றேன்.

கடைசியில் ஒரு மாதிரியாக மூன்று மணி நேரத்தில் கார் மறுபடியும் உயிர் பெற்றது. கஸ்டமர் கேர் என்றால் என்னவென்றே தெரியாமல் டெல்லையில் கால் சென்டர் வைத்துக் கொண்டு சென்னையில் உள்ளவர்களின் தாலியை அறுக்கும் இந்தப் பணிக்கு பெயர் கஸ்டமர் கேர் சர்வீஸ் என்றால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.

நண்பனின் வீட்டை அடைந்து ஒரு மூன்று லார்ஜ் ப்ளாக் டாக் (கருப்பு நாய்) ஸ்காட்ச் விஸ்கி அடித்த செலவு எக்ஸ்ட்ரா. வாழ்க இந்தியா!

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...