Skip to main content

SuperSize Me




சமீபத்தில் நான் பார்த்த ஒரு நல்ல ஆங்கில படத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

என் நண்பர் (ஹிமாலயாஸ்) கிருஷ்ணமூர்த்தி போல என்னால் வரிசையாக இராக், அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான் நாட்டு இயக்குனர்களின் படங்களை பார்க்க முடியாவிட்டாலும் (அவை என்னதான் உண்மையோடு ஒற்றி எடுக்கப்பட்டாலும் எனக்கு கொஞ்சம் மசாலா தூவி இருந்தால்தான் பிடிக்கும்)நல்ல ஆங்கில படங்களை அடிக்கடி பார்ப்பது என்பது என் பள்ளி நாட்களில் துவங்கிய ஒரு பழக்கம்.

எனவே இப்போது சூப்பர் சைஸ் மீ:

இது திரைப்படமல்ல. இது ஒரு விவரணப் படம் (documentary film). கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் Fast Food Nation என்ற புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த போது, அதிலிருந்த நிஜம் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. Fast food என்ற துரித உணவு நம் உடலுக்கு என்னவெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்பதை மிகவும் graphic ஆக விளக்கிய அந்த bestseller இல் அதிர வைக்கும் உண்மைகள் ஏராளம்.

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன் ஸ்பெர்லாக்கிற்கு (Morgan Spurlock) திடீரென்று திரைப்படம் இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர் மது அருந்துவதை நிறுத்துகிறார். ஆறு வாரங்கள் கழித்து தனது உடம்பை முழுமையாக பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்கள். பரிசோதனையின் போது மார்கனின் உடல் எடை 84.1 கிலோ.

அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் துரித உணவு நிறுவனங்களை கேள்விக்குட்படுத்துவது. அதற்காக தன்னை சோதனைக்கூடத்தின் பரிசோதனைப் பொருளாக மாற்றிக் கொண்டார் மார்கன். அதுவொரு மோசமான ஆச்சரியப்பட வைக்கும் ஐடியா!

துரித உணவு அமெரிக்க வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வால் மார்ட்(Wal Mart), பர்கர் கிங் (Burger King), ஸ்டார் பக்ஸ் (Star Bucks), மெக் டொனால்ஸ் (McDonalds) போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவின் துரித உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இதில் மெக் டொனால்ஸின் வளர்ச்சி அபாரமானது. அமெரிக்காவின் மொத்த துரித உணவு வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதியை கைவசப்படுத்தியிருக்கும் இந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உணவகங்களுடன் பிரம்மாண்டமாக கிளை பரப்பி நிற்கிறது.

அதிகபடியான கலோரிகள் கொண்ட துரித உணவுகளால் உருவாகும் மோசமான விளைவுகளில் ஒன்று உடல் பருமன். அமெரிக்கர்களில் பாதிக்கும் மேல் obesity எனப்படும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். குழந்தைகளில் 37 விழுக்காடு பேர் தேவையில்லாத உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

இதய நோய், நீரிழிவு (Diabetes), கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றின் தோற்றுவாயாக உடல் பருமன் இருக்கிறது.

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மார்கன், இரண்டு பருமனான பெண்கள், தங்களது அதிக உடல் பருமனுக்கு மெக் டொனால்ஸ் உணவுகளே காரணம் எனக் கூறுவதை காண்கிறார். அப்பொழுது அவர் மனசுக்குள் ஓர் எண்ணம். அந்த எண்ணமே சூப்பர் சைஸ் மீ விவரணப் படமாக உருவாகிறது.

சூப்பர் சைஸ் மீ படத்தில், நோயில்லாத ஒருவர் மருத்துவரை எதிர்கொள்ளும் கலகலப்பான மனநிலையுடன் தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களுடன் உரையாடுகிறார் மார்கன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். பிறகு பார்வையாளர்களுக்கு தனது திட்டத்தை விளக்குகிறார் மார்கன்.

தொடர்ந்து முப்பது நாட்கள் தினம் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ஸ் துரித உணவகத்தில் எடுத்துக் கொள்வது. இரண்டாவது, முப்பது நாட்களுக்குள் மெக் டொனால்ஸின் மெனு கார்டில் உள்ள உணவுகள் அனைத்தையும் ஒரு முறையாவது சாப்பிடுவது.

திட்டம் தயாரானதும் மார்கனின் பயணம் தொடங்குகிறது. முதல் நாள் தனது மான்ஹட்டன் வீட்டின் அருகிலுள்ள மெக் டொனால்ஸ் துரித உணவகத்தில் காலை உணவை எடுத்துக் கொள்கிறார். பிறகு வெவ்வேறு வாகனங்கள். வெவ்வேறு நகரங்கள். ஆனால் மூன்று வேளையும் அதே மெக்டொனால்ஸ் துரித உணவுகள்; தண்ணீர் உட்பட.

நாட்கள் நகர நகர மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணர முடிகிறது. ஐந்தாவது நாள் சோர்விலும், உடல் தளர்ச்சியிலும் பாதிக்கப்படுகிறார் மார்கன். உடல் எடையும் கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது. அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிடும்படியும் கூறுகிறார்.

ஆனால், மார்கனின் பயணம் தொடர்கிறது. மூன்று வேளை உணவுடன் தினம் ஐயாயிரம் அடிகள் நடப்பதையும் தனது முப்பது நாள் திட்டத்தில் மார்கன் சேர்த்துக் கொண்டிருந்தார். இது ஒரு அமெரிக்கன் தினசரி நடக்கும் சராசரி தூரம். பயணத்தின் நடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுடனான உரையாடலையும் படத்தில் சேர்த்துள்ளார் மார்கன்.

முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை 95.35 கிலோ அதிகரித்திருப்பது தெரிய வருகிறத. இதேபோல சர்க்கரை அளவும், கொழுப்பும் நம்ப முடியாத அளவு அதிகரித்துள்ளது. படத்தின் உச்சமாக, மார்கனின் அன்றைய காதலியும் இந்நாள் மனைவியுமான அலெக்ஸான்ட்ரா ஜெமிசன் (Alexandra Jamieson) பேசுகிறார். மார்கன் மெக் டொனால்ஸ் உணவை எடுத்துக் கொண்ட காலத்தில் அவர் சோர்ந்து போயிருப்பதை தன்னால் உணர முடிந்தது என்றும், மார்கனின் செக்ஸ் செயல்பாடுகளை மெக் டொனால்ஸ் பெருமளவு பாதித்தது என்றும் அவர் கூறும்போது நாம் அதிர்ந்து போகிறோம்.

அமெரிக்க திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த விவரணப் படங்களில் ஏழாவது இடம் பிடித்த மார்கனின் இப்படம் அதன் உள்ளடக்கத்துக்காக (original idea) ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. படம் வெளியான பின் மெக் டொனால்ஸ் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது. மார்கன் ஒரு சராசரி மனிதன் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டார் என்ற அதன் குற்றச்சாட்டு பயனில்லாமல் போனது. நெருக்கடிகளிலிருந்து மீள, படம் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டி வந்தது. அதில், ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், சூப்பர் சைஸ் மீ யில் காட்டப்பட்ட மெக் டொனால்ஸ் மெனுவில் உள்ள எந்த உணவும் இனி விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் உறுதி அளித்தது.

இந்த படம் 2004 இல் வெளியானது. இப்போது DVD இல் கிடைக்கிறது.

தமிழர்களின் கனவுகளில் தமிழ்நாட்டின் கலையும், கலாச்சாரமும், கிராமங்களும், எளிய வாழ்க்கை முறையும், நவதானியங்களும் சுத்தமாக இட நீக்கம் செய்யப்பட்டு பீட்சாவும், கெண்டகி சிக்கனும் நிறைந்த கார்ப்பரேட் கனவுகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத கொடையாக மெக் டொனால்சும் இந்தியாவுக்குள் கடைபரப்பியிருக்கிறது.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும் பெப்சியும் தாராளமாக இந்தியாவில் கிடைக்கிறது. இவற்றை வாங்க நமக்கு எந்த மனத்தடையும் இல்லை. நமது இந்த விழிப்புணர்வின் பின்னணியில் மெக் டொனால்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது அச்சமே மேலோங்குகிறது.

சூப்பர் சைஸ் மீ படம் குறித்து சொல்லும்போது, சரியான நேரத்தில் நாங்கள் அதை எடுத்தோம் என்றார் மார்கன். அதே போன்றதொரு படத்தை தமிழிலும் எடுக்க இது சரியான நேரம்தான். என்ன செய்வது மார்கன் ஸ்பெர்லாக்குகள் நம்மிடையே இல்லையே!

நமக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் கருவுற்றிக்கிறாரா, லக்ஷ்மி ராய் உண்மையிலேயே தோனியின் காதலியா, ஷங்கரின் எந்திரன் படம் எப்போது வரும் போன்ற மிக முக்கிய கவலைகளின் நடுவே, நம் குழந்தைகள் பசி என்றவுடன் காசைக் கொடுத்து விடுகிறோம், அவர்களும் மறக்காமல் ஒரு கோக் அல்லது பெப்சி மற்றும் லேஸ் சிப்ஸ் பாக்கட்டுடன் டீவீ முன்னால் உட்கார்ந்து விடுகிறார்கள்.

Comments

அன்பு நண்பரே!!
என்னுடைய கட்டுரைக்கு உங்கள் தளத்தை பரிந்துரை செய்துள்ளேன்.உங்கள் இடுகை மிக நல்ல கட்டுரை. மிக்க நன்றி..

தேவா.
வாவ், நல்ல பதிவு... நன்றி!
தொடரவும்!!
Srikanth said…
Good one Sridhar. This should be given wide publicity. Bcos, the crowds we see at McDonalds,KFC & Marrybrown really make me wonder where we are heading.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்