Skip to main content

எழுத்தாளர் சுஜாதா எனும் ஜீனியஸ்: ஒரு ரசிகனின் அஞ்சலி




நேற்று இரவு சுமார் 10 மணிக்கு சுஜாதா காலமான செய்தி, எனக்கு சற்று தாமதமாக இன்று காலைதான் தெரிந்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக அவருடைய எழுத்துக்களை விடாமல் துரத்தும் ஒரு ரசிகன் என்கிற முறையில் என்னால் மனப்பூர்வமான அஞ்சலியை மட்டுமே செலுத்த முடியும்.

ஒரு எழுத்தாளனின் நடை, எழுத்தாக்கம், உணர்வு இவற்றையெல்லாம் மீறி எனக்கு (என்னைபோன்ற எத்தனையோ பேருக்கு) சுஜாதா பல விஷயங்களில் ஒரு மானசீக குரு என்றுதான் சொல்லவேண்டும்.

அவர் நன்றாக இருக்கிறது என்று கைகாட்டிய நிறைய கவிதைகளை, கதைகளை வாசித்திருக்கிறேன்: அவரால் சிலாகிக்கப்பட்ட திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்;அவர் சொன்ன கட்டுரைகளை இணையதளத்தில் தேடிப்பிடித்து download செய்து படித்திருக்கிறேன்; அவர் வசனம் எழுதிய ஒரே காரணத்தால் விசில், கண்ணெதிரே தோன்றினாள் போன்ற குப்பையான படங்களையும் பார்த்திருக்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலே பிறந்த நிறைய குழந்தைகளுக்கு (என் வாரிசுகள் உட்பட) தமிழ் படிக்கவே தெரியாத காலத்தில், சுஜாதாவின் எழுத்து மூலம் நிறையவே கற்றுக்கொண்டேன் என்றால் அது மிகையாகாது. அவர் தந்தை இறக்கும்போது அவருக்கு வயது 93 என்று படித்திருக்கிறேன். அவருடைய தந்தையின் மறைவைப் பற்றி குமுதத்தில் எழுதும்போது, " மறுபடியும் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வர, அவசர அவசரமாக KPN பஸ் பிடித்து (அப்போது சுஜாதா பெங்களூரில் இருந்தார்) சேலம் சென்றேன். கவலையுடன் இருந்த என்னைப் பார்த்த கண்டக்டர் என்ன சார அடிக்கடி வரீங்க?
என்றார்.அப்பாவுக்கு உடம்பு சரியில்லைப்பா என்றேன். ஓகோ, அப்படியா, டே அந்த மொளகா மூட்டைய பாத்து எறக்குடா," அந்த சமயத்திலும் அவருடைய நகைச்சுவை உணர்வு தலைதூக்கியதை ரசித்திருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன், அவர் BEL நிறுவனத்தில் பணி புரியும் போது LTC எடுத்துக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் காரில் ஊர் சுற்றியதைப் பற்றி (தமிழ்நாடு 2000 மைல்) எழுதும் போது, "வீட்டை விட்டு வெளியே வந்து கொரமங்கலாவை நெருங்கும்போது ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தம் கேட்கவே, ஐய்யோ கார் டயர் பஞ்சராகிவிட்டதா என்று பதட்டத்துடன் கீழே இறங்கிப் பார்த்தால். ஒன்றுமில்லை. என் இரண்டாவது மகன் நான்தான் அப்படி சத்தம் செய்தேன் என்றான். ஏற்கனவே லேட் என்பதால் அவனை சவட்டும் எண்ணத்தை ஒத்திப் போட்டுவிட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்" என்று எழுதி இருப்பார்.

நான், என் நண்பன் நாகு (என்னைபோலவே இன்னொரு தீவிர சுஜாதா ரசிகன்) எல்லோருக்கும் அப்போது இருந்த ஒரு பேராசை: சுஜாதா கதை வசனம் எழுத, கமல் நடிக்க, இளையராஜா இசை அமைக்க ஒரு படம் வரவேண்டும் என்பதுதான். அது விக்ரம் படம் மூலம் நிறைவேறினாலும், துரதிருஷ்டவசமாக அந்த படம் ஓடாமல் போனாலும் அதை எவ்வளவோ முறைப் பார்த்து ரசித்தோம்.

அவர் எழுத்துக்கு என்றும் வயதாவதில்லை. நான் சாகும் வரை அவற்றை படித்து ரசிக்கத்தான் போகிறேன்.

அவருடைய ஆன்மா எல்லாம் வல்ல (அவருடைய இஷ்ட தெய்வமான) ஸ்ரீரங்கநாதனின் பாதங்களை அடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

Comments

Unknown said…
ராம்...நானும் உங்களைப்போல் ஒருவன். சுஜாதாவை படித்து படித்து....நம் நினைவு தவறும் வரை சுஜாதாவை மறக்க முடியாது. போயிட்டாரே மனுஷன். "ஒருத்தரும் அவுட்டே ஆக மாட்டாங்க என்று கிரிக்கெட்டில் ரூல் இருந்தால், அந்த ஆட்டம் ரசிக்குமா?" என்று மரணத்தை அழகாக எளிமையாக நியாயப்படுத்தியவர். ஆனால் அவர் மறைந்ததை நம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே...5 வருஷங்கள் ஆயிடுச்சு...

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...