Skip to main content

எந்திரனில் சுஜாதாவின் வசனம்

   
சில நாட்களுக்கு முன்னதாக, எழுத்தாளர் சுஜாதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சென்னையில் நடந்தது. உயிர்மை பதிப்பகம், சுஜாதா அறக்கட்டளை  இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், பார்த்திபன், ராஜீவ் மேனன், பட அதிபர் வி.சி.சந்திரசேககரன், எழுத்தாளர்கள்  இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மதன், ஏ.நடராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: சுஜாதா பன்முகம் கொண்டவர். அவரது எழுத்து திறமை மட்டுமே வெளியில் தெரிகிறது. மற்ற திறமைகள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது.

திரைத் துறையில் அவர் சாதனை படைத்தார். வசனங்கள் சிறிதாகவும், பவர்புல்லாகவும் இருக்க வேண்டும் என்று கூறுவார். ‘அந்நியன்’ படத்தில்  ரயிலில் சாப்பாடு சரியில்லை, மின்விசிறி சுழலவில்லை என்று அம்பி (விக்ரம்) புகார் சொல்வார். அதைக்கேட்ட டி.டி.ஆர், ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க’  என்பார். உடனே விக்ரம் ‘அட்ஜட்ஸ்ட் பண்ணி பண்ணித்தான் இந்த தேசம் இப்படி இருக்கு’ என்பார். ‘அந்நியன்’ படத்தில் ‘சிறுதப்புக்கும் கொலை  செய்வதா?’ என்று ஒருவர் கேட்க,’ தப்பு என்ன பனியன் சைஸா, ஸ்மால், மீடியம், எக்ஸ்டிரா லார்ஜ் என்று பார்ப்பதற்கு’ என்பார். இதேபோல்  ‘சிவாஜி’ படத்திலும் வலுவான வசனங்கள் எழுதினார்.

இப்போது உருவாகி வரும் ‘எந்திரன்’ படத்துக்கும் நல்ல வசனம் எழுதி இருக்கிறார். வேலை செய்துவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பும்  ரஜினியின் முகத்தில் நீண்ட தாடி வளர்ந்திருக்கும், அதைப்பார்க்கும் அவரது அம்மா, ‘என்னடா லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கே’ என்று கேட்பார்.  ஒரு சீனை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதக்கூடாது என்பார். எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால் ஒரு தந்தையிடம் ஆலோசனை கேட்பதுபோல்  அவரிடம் கேட்பேன். இவ்வாறு ஷங்கர் பேசினார். 

இதற்கு முன் ஒருமுறை எந்திரன் படத்திற்கான முழு வசனத்தையும் சுஜாதா மறைவதற்கு முன் எழுதிவிட்டார் என இயக்குனர் ஷங்கரே ஒருமுறை ஒரு வார இதழில் கூறியிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான அவருடைய பேட்டியில் (ஆனந்த விகடன் என நினைக்கிறேன்) சுஜாதா பாதி வசனங்களை மட்டுமே எழுதினார், மீதி வசனத்தை நானே எழுதியுள்ளேன், அதைப் பார்த்தால் நிச்சயம் சுஜாதா மகிழ்ச்சி அடைவார். மேலும் இந்தப்  படத்திற்கான  தொழில்நுட்ப விஷயங்களை எழுத கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்கி உதவினர் என சொல்லியிருந்தார். என் மனைவி (என்னைப் போல சுஜாதாவின் 
தீவிர ரசிகை) சொன்னது போல சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் மட்டுமே இதற்கான பதில் தெரிந்திருக்கும். 

இரண்டு நாட்களாக தினசரிகளில் ஏக்கர் கணக்கில் எந்திரன் பட விளம்பரங்கள் வருகின்றன. முக்கிய விளம்பரங்களில் வைரமுத்து, பா.விஜய், கார்கி இவர்களின் பெயர்கள்தான் பெரிதாக இருக்கின்றன. சுஜாதாவின் பெயர் இல்லை. ஒரு சில விளம்பரங்களில் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களுடன் சுஜாதாவின் பெயரும் சிறிதாக இடம் பெற்றிருக்கிறது.

ஒரு படத்தில் முக்கிய பங்கு இயக்குனருக்கு என்றால், ஷங்கரின் பெரிய வெற்றி படங்களான முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களில் வந்த சுஜாதாவின் "நெத்தியடி" வசங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. ஆனால், அதே படங்களின் பாடல் வரிகளை எவ்வளவு பேரால் நினைவு கொள்ள முடியும்? அப்படியிருக்கும் போது, வைரமுத்து, பா.விஜய், கார்கி ஆகியோருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் சுஜாதாவுக்கு தரப்படவில்லை?  

உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் இரா.முருகன் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது: "மறதி ஒரு தேசிய வியாதி."

Comments

நண்பரே இப்போது வெளிவரும் விளம்பரங்கள் இசை வெளியீட்டுக்கானது அதனால் பாடல் எழுதியோர், இசை அமைப்பாளர் என்பவர்களது பெயர்கள் அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. படம் வெளிவருகையில் அவருக்கு ஓரளவு முக்கியத்துவம் தரப்படும் என நம்பலாம்.