Skip to main content

MRP எனப்படும் ஏமாற்று வேலை

நாம் எல்லோருமே தினசரி வாழ்கையில் பல பொருட்களை வாங்குகிறோம். கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையையும் சரி பார்க்கிறோம். MRP எனப்படும் இந்த Maximum Retail Price (அதிக பட்ச சில்லறை விலை) க்கு மேல் அந்த பொருளுக்கு பணம் தர வேண்டிய நிலைமை வந்தால் வியாபாரியிடம் காரணம் கேட்கிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்க உத்தரவின்படி எந்தவொரு வியாபாரியும் எந்த பொருளையும் இந்த MRP க்கு மேல் விலை வைத்து விற்கக்கூடாது என்று எதாவது சட்டம் அல்லது அரசாணை இருக்கிறதா என்றால், இருக்கிறது! Standards of Weights & Measures (Enforcement) Rules, 1985 என்ற சட்டபிரிவின் கீழ் MRP க்கு மேல் எந்தவொரு பொருளும் விற்கப்படக் கூடாது என்று இருந்தும் இதை யாரும் மதிப்பதில்லை. இப்படி ஒரு சட்டம் இருப்பது நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு தெரியுமா என்றால்,ஆச்சரியமான உண்மை, பெரும்பாலும் இல்லை.

என்னுடைய வாரிசுகளுக்கு Pizza என்றால் மிகவும் பிடிக்கும். (பெற்றோரின் கஞ்சத்தனம் காரணமாக பல பெற்றோர் என்னுடைய குழந்தைகளுக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்சா ஆகிய எதுவுமே பிடிக்காது என்று சொல்லி தயிர் சாதம், இட்லி, தோசை தவிர வேறு எதுவுமே தெரியாத கிணற்று தவளைகளாக வளரும் குழந்தைகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். மேற்கண்ட பொருட்கள் எல்லாமே உடலுக்கு தீங்கு என்பதால் நாங்கள் அவற்றை எங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தருவதில்லை என்ற வீண் வாதம் பற்றி நாம் இங்கு பேசப் போவதில்லை).

சமீபத்தில் டொமினோஸ் பிஸ்சா ஆர்டர் செய்துவிட்டு (பெரும்பாலான பிஸ்சா தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட 65% வியாபாரத்தை Home Delivery மூலமே முடித்து விடுகிறார்களாம்) அது வீட்டுக்கு வந்தபோது அதன் கூட வந்த கோகோ-கோலா (600 ml) பாட்டிலின் MRP யை பார்த்தபோது Rs.30/- என்று அச்சாகியிருந்தது. வெளியே வாங்கும் 2 லி பாட்டின் விலை ரூ.50/- இதன்படி பார்த்தால் ஒரு லிட்டரின் விலை ரூ.25/- தான். அப்படியிருக்க 600 மிலி விலை எப்படி ரூ.30/- ஆகும் என்று கேட்டால் அதற்கு பதில் பாட்டிலின் மேல் இருக்கும் லேபலில் இருக்கிறது. MRP ரூ. 30/- என்றுதான் அச்சாகியிருக்கிறது. அந்த 600 மிலி பாட்டில் டொமினோஸ் பிஸ்சாவுக்கென்று தயாரான பாட்டில். சட்டத்தை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமோ அப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு நாள் தெரியாமல் one-way இல் புகுந்துவிட்டால் சட்டத்தை மீறிய குற்றமாகி போலீசுக்கு தண்டம் அழ வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.

கிட்டத்தட்ட எல்லா தியேட்டர்களிலும் இந்த மாதிரி பகல் கொள்ளை நடக்கிறது. பல ரெஸ்டாரன்ட்களில் நாம் சிற்றுண்டியுடன் மினரல் வாட்டர் கேட்கும்போது, அதற்கான பில் தொகையை பார்ப்பதில்லை. பார்த்தால் வெளியே சாதாரணமாக ரூ.10 க்கு விற்கப்படும் அந்த மினரல் வாட்டரின் விலை சுமாராக ரூ.20 அல்லது ரூ.25 க்கு உங்களுக்கு பில்லில் வந்திருக்கும்.

தண்ணியில் மட்டுமில்லை, எல்லா நுகர் பொருட்களிலும் (consumer goods) இந்தமாதிரி கொள்ளை நடக்கிறது. MRP என்பதை பேசாமல் Minimum Retail Price என்று மாற்றிவிடலாம். நம்முடைய பேதை மனம் அப்போதாவது சமாதானம் ஆகுமா என்று பார்க்கலாம்.

Comments

Unknown said…
தண்ணி, பீட்ஸா போன்ற மேல் தட்டு வர்க்க வஸ்துக்களுக்கு MRP என்பது Minimum Recommended price ஆக இருக்கும். துவரம் பருப்பு; உளுத்தம் பருப்பு போன்ற மத்திய தர வர்க்க சாமான்கள் எல்லாமே (underline) எல்லாமே MRP விட குறைந்த விலையிலேயே கிடைக்கிறது.
Unknown said…
மேலும் இது போன்ற வஸ்துக்களை வாங்கும்போது அவன் கேட்கும் விலையை வாயையும் அதையும் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுவோம். ஆனால் செருப்பு தைப்பவனிடம் பேரம் பேசுவோம். நான் ஒருமுறை செருப்பு தைக்க நின்றுகொண்டிருந்தபோது எனக்கு முன் இருந்தவர் "அதே ஊசி தான் வைத்திருக்கிறாய். நூலும் விலை ஏற வில்லை. ஆனால் தைப்பதற்கு மட்டும் ஏன் பத்து ரூபாய் கேட்கிறாய்" என்றவாறே என்னை பார்க்க நான் , " ஆனால் அரிசியும் பருப்பும் விலை ஏறி விட்டது. அதே அரிசியையும் பருப்பையும் தானே அவனும் வாங்கி சாப்பிட வேண்டும் என்றேன்". சொன்னவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.